`அதற்கு நான் பதில் சொல்ல முடியாது; பேரவைத் தலைவர் என்ற முறையில்...' - சபாநாயகர் ...
100 மீட்டரை 10.09 விநாடிகளில் கடந்த இந்தியப் புயல்: யார் இந்த அதிவேக மனிதர் குரிந்தர்வீர் சிங்?
"இந்தியர்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கான மரபணு இல்லை; ஆகவே 400 மீட்டர் ஓட்டத்திற்கு மாறுவதுதான் நல்லது," என்று சொல்லும் பலரின் ஏளனங்களுக்கு வார்த்தைகளால் பதிலளிக்காமல், தனது கால்களின் வேகத்தால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் குரிந்தர்வீர் சிங். 100 மீட்டர் தூரத்தை வெறும் 10.09 விநாடிகளில் கடந்து இந்தியாவின் `அதிவேக மனிதராக' சரித்திரம் படைத்திருக்கிறார் இந்த இளம் புயல்.
பஞ்சாப் மாநிலத்தின் ஒரு குக்கிராமத்தில் இருந்து புறப்பட்டு, பல தடைகளைத் தாண்டி இன்று இந்தியாவின் `புதிய பறக்கும் சீக்கியராக’ (New Flying Sikh) உருவெடுத்துள்ளார் குரிந்தர்வீர் சிங்.

குரிந்தர்வீர் சிங், டிசம்பர் 24, 2000 அன்று பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள போக்பூர் நகரை ஒட்டியுள்ள பாட்டியால் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். விவசாயம் சார்ந்த குடும்பப் பின்னணியைக் கொண்ட இவரின் தந்தை கமல்ஜித் சிங், பஞ்சாப் காவல்துறையில் உதவி சார்பு ஆய்வாளராக (ASI) பணியாற்றி ஓய்வுபெற்றவர். மேலும், அவர் தேசிய அளவிலான கைப்பந்து வீரரும் கூட. தனது மகனிடம் இருந்த அசாத்தியமான வேகத்தையும், சுறுசுறுப்பையும் சிறுவயதிலேயே தந்தை கமல்ஜித் சிங் அடையாளம் கண்டார்.
ஆரம்பத்தில், குரிந்தர்வீர் தனது கிராமத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டல்லா குருநானக் மிஷன் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தார். அப்போது அவரது முதல் பயிற்சியாளரான சர்வான் சிங், "இந்த சிறுவன் ஒருநாள் இந்தியாவின் தலைசிறந்த வீரராக வருவான்" என்று தந்தையிடம் நம்பிக்கையுடன் கூறினார்.
பத்தாம் வகுப்பு படிக்கும்போது, ஜலந்தரில் உள்ள கேம்பிரிட்ஜ் பள்ளிக்கு மாறிய குரிந்தர்வீர், பஞ்சாப் விளையாட்டு நிறுவனத்தின் (PIS) பயிற்சியாளர் சரப்ஜித் சிங் ஹாப்பியிடம் முறையான பயிற்சி பெறத் தொடங்கினார். தினமும் கிராமத்தில் இருந்து ஜலந்தருக்கு பேருந்தில் பல மணிநேரம் பயணம் செய்து பயிற்சி பெறுவது மிகுந்த சோர்வை அளித்தது. மகனின் கஷ்டத்தைப் பார்த்த தந்தை கமல்ஜித் சிங், மாதத்தவணை முறையில் 5,000 ரூபாய் கொடுத்து ஒரு பழைய ஸ்கூட்டரை வாங்கிக் கொடுத்தார். மகனின் முன்னேற்றத்திற்காக அந்தக் குடும்பம் ஜலந்தருக்கே குடிபெயர்ந்தது. பின்னர் ஜலந்தர் கலை மற்றும் விளையாட்டு கல்லூரியில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தார் குரிந்தர்வீர்.

இளம் வயதிலேயே பல தேசிய சாதனைகளை படைத்து வந்த குரிந்தர்வீரின் வாழ்வில் எதிர்பாராத பெரும் தடை வந்தது. கடுமையான செரிமானப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, அவரது உடல் எடை மர்மமான முறையில் குறையத் தொடங்கியது. ஓட்டப்பந்தய வீரருக்குத் தேவையான தசைகள் பலவீனமடைந்தன. இது அவருக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரும் விரக்தியைக் கொடுத்தது. விளையாட்டை விட்டு விலகும் நிலைக்குத் தள்ளப்பட்ட அவர், பாரம்பரிய சித்த/மூலிகை மருத்துவ முறைகளின் உதவியோடு சுமார் இரண்டு ஆண்டுகள் போராடி, இழந்த தசை வலிமையை மீண்டும் பெற்று, ஓடுதளத்தில் பீனிக்ஸ் பறவையாக மீண்டும் எழுந்து வந்தார்.
2026ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா தடகள மைதானத்தில் நடந்த 29-வது தேசிய சீனியர் ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டி. அது இந்திய தடகள வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.
அப்போட்டியில் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறின. மே 22 (வெள்ளிக்கிழமை) நடந்த அரையிறுதியில் 10.17 விநாடிகளில் ஓடி குரிந்தர்வீர் புதிய தேசிய சாதனை படைக்க, அடுத்த சில நிமிடங்களிலேயே ஒடிசாவின் அனிமேஷ் குஜூர் 10.15 விநாடிகளில் ஓடி அந்த சாதனையை முறியடித்தார்.

ஆனால், உண்மையான புயல் அடுத்த நாள் வீசக் காத்திருந்தது. மே 23 (சனிக்கிழமை) நடந்த இறுதிப்போட்டியில், ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் சார்பாக களமிறங்கிய குரிந்தர்வீர் சிங், மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து 100 மீட்டர் தூரத்தை வெறும் 10.09 விநாடிகளில் கடந்து மாபெரும் சரித்திரம் படைத்தார். இதன் மூலம் 10.10 விநாடிகள் என்ற இலக்கை முறியடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இது இந்த சீசனில் ஆசியாவிலேயே இரண்டாவது அதிவேக நேரமாகும் (ஜப்பானின் ஃபுகுடோ கோமுரோ 10.08 விநாடிகள் எடுத்ததே முதலிடம்).
பந்தயத்தை முடித்தவுடன், விமர்சகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் கேலி செய்தவர்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக, குரிந்தர்வீர் தனது நெஞ்சில் குத்தியிருந்த எண் அட்டையின் (Bib) பின்புறம் எழுதி வைத்திருந்த ஒரு குறிப்பை கேமராக்களுக்கு முன்பு காட்டினார்.
அதில், "Task is not finished yet. 10.10. Wait. I am still standing." என்று ஐபிஎல் பாணியில் உணர்ச்சிகரமாக எழுதப்பட்டிருந்தது. இது ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு ரசிகர்களையும் சிலிர்க்க வைத்தது. இந்த வெற்றிக்கு தற்போதைய பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹில்லியரின் கடுமையான பயிற்சிகளும் முக்கியக் காரணம்.

65 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் மற்றும் இந்திய மக்களின் பெருமையாக உருவெடுத்துள்ளதால் இவரை "புதிய ஃபிளையிங் சீக்கியர்" (New Flying Sikh) என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
"100 மீட்டர் ஓட்டம் இந்தியர்களுக்கானது அல்ல" என்ற பல ஆண்டுகால நம்பிக்கையைத் தகர்த்து, 2026 காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதி இலக்கை மிக எளிதாகக் கடந்துள்ளார் குரிந்தர்வீர் சிங்.
தனது மகன் ஒருநாள் ஒலிம்பிக்கில் இந்தியாவின் கொடியை ஏந்தி பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே தந்தை கமல்ஜித் சிங்கின் வாழ்நாள் கனவு. வலிகளையும் விமர்சனங்களையும் உரமாக்கி, இன்று அதிவேக இந்தியனாக உருவெடுத்துள்ள குரிந்தர்வீர் சிங்கை வாழ்த்துவோம்.

















