சரியும் இந்திய ரூபாய் மதிப்பு: 2 காரணங்கள் என்னென்ன? கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி
'2600 பயணிகள், 110 கி.மீ' - நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர்
டீசலுக்கு மாற்றாக இப்போது அதிக அளவில் ரயில்களை இயக்க மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மின்சாரத்தை ஹைட்ரஜன் மூலம் தயாரித்து அதிலிருந்து ரயில்களை இயக்கும் திட்டம் நீண்ட நாட்களாகச் சோதனையில் இருந்து வந்தது.
இந்தச் சோதனை இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. ரயிலில் முதல் முறையாக ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு புதிய ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். இது டீசல் ரயில்களுக்கு மாற்றாக இருக்கும். இந்த ரயிலில் ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் வசதிகளும் அடங்கும்.
இது குறித்து பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், "ஹைட்ரஜன் ரயில்களைக் கொண்ட குறிப்பிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்றாக மாறியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ரயில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் தற்போது 75 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்கும். இந்த ரயில் 10 பெட்டிகளைக் கொண்டது ஆகும். இந்த ஹைட்ரஜன் ரயிலில் 2600 பேர் பயணம் செய்ய முடியும். இது ஹரியானாவின் ஜிண்ட் சந்திப்பு மற்றும் சோனிபட் இடையே இயக்கப்படும்.
தற்போது ஜெர்மனி, சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் ஹைட்ரஜனில் ரயில்களை இயக்கி சோதனை செய்து வருகின்றன. உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டது. 2022ம் ஆண்டு இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஜெர்மன் மேலும் 3 ஹைட்ரஜன் ரயில்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஜப்பான் அடுத்த ஆண்டு இறுதியில்தான் ஹைட்ரஜன் ரயில்களை அதிகாரபூர்வமாகப் போக்குவரத்திற்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. அமெரிக்கா 2024ம் ஆண்டு ஹைட்ரஜன் ரயிலை அறிமுகம் செய்தது.




















