மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு...
41 ஆண்டுகளுக்கு முன்பு தத்து கொடுக்கப்பட்டவர்; அம்மாவை தேடி நாக்பூர் வந்துள்ள நெதர்லாந்து மேயர்!
நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹீம்ஸ்டேட் என்ற நகரத்தில் மேயராக இருப்பவர் பால்குன் பின்னன்டைக். கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு பால்குன் திருமணமாகாத பெண் ஒருவருக்கு நாக்பூரில் பிறந்தார். அவர் பிறந்த 3 நாட்களில் ஆசிரமம் ஒன்றில் விடப்பட்டார். இதையடுத்து அந்த குழந்தையை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி தத்து எடுத்துக்கொண்டு தங்களது நாட்டிற்கு கொண்டு சென்றனர். பால்குன் அங்கேயே வளர்ந்து அரசியலில் நுழைந்து இப்போது மேயராக இருக்கிறார்.
அவரை தத்து எடுத்தவர்கள் பால்குனிடம் இந்தியாவில் இருந்து தத்து எடுத்து வந்ததை குறிப்பிட்டுள்ளனர். அதிலிருந்து பால்குனிக்கு தனது தாயாரை பார்க்கவேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. இதற்காக ஏற்கனவே இரண்டு முறை நாக்பூர் வந்து தனது தாயார் குறித்து விசாரித்துள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவிற்கு வந்தபோது நாக்பூரில் உள்ள மாத்ரு சேவா சங்கத்தின் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அந்த ஆசிரமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற செவிலியர்தான் பால்குனிக்கு பெயர் வைத்திருந்தார்.

தனக்கு பெயர் வைத்த செவிலியரை பார்த்தவுடன் பால்குனி மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளானார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக பால்குனி தனது தாயாரை தேடிக்கொண்டிருக்கிறார். கடந்த 2024ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தபோது மாத்ரு சேவா சங்கத்திற்கு சென்று தனது பிறப்பு சான்றிதழ் தொடர்பான ஆவணங்கள் இருக்கிறதா என்று கேட்டறிந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து வகையான உதவிகளையும் செய்து கொடுத்தது. ஆவணங்களை ஆய்வு செய்தபோது திருமணமாகாத பெண்ணிற்கு பால்குனி பிறந்தார் என்று தெரிய வந்துள்ளது.
ஆனால் அந்த பெண்ணின் முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து பால்குனி கூறுகையில்,''என் வாழ்க்கையில் எனது தாயாரை கண்டுபிடிக்க முடியாத விஷயம் தவிர மற்ற அனைத்தும் முழுமை அடைந்து இருக்கிறது. எனது மனைவி, எனது தாயாரை தேடுவதை தொடருமாறு ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கிறார். குந்தி இரகசியமாக கர்ணனைப் பெற்றெடுத்து, அவனை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் மிதக்கவிட்ட மகாபாரதக் கதையைப் படித்ததும், எனது தாயாரை தேடுவது மேலும் அளித்துள்ளது.
ஒவ்வொரு கர்ணனுக்கும் தன் குந்தியைச் சந்திக்கும் உரிமை உண்டு, அது அவனுக்குக் கிடைக்க வேண்டும். நான் எனது தாயாரை சந்தித்து, எனக்கு ஒரு அழகான வாழ்க்கை இருக்கிறது என்றும், அவருடைய குழந்தை அன்புடன் வளர்ந்திருக்கிறது என்றும் சொல்ல விரும்புகிறேன். நான் எனது மகளுக்கு எனது தாயாரின் பெயரைச் சூட்டி இருக்கிறேன். அடுத்த ஆண்டு நாக்பூருக்குத் திரும்பவும் வர திட்டமிட்டு இருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.





















