சினிமாவில் பயன்படுத்தப்பட்ட இளைஞரின் மொபைல் எண்; படக்குழுவுக்கு எதிராக வழக்குக்க...
45 லிட்டர் கொள்ளளவு டேங்கில் 52 லிட்டர் பெட்ரோல் எப்படி? - கார் உரிமையாளரால் அம்பலமான மோசடி
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், தனது புத்தம் புதிய காரின் 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கில் 52 லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டதாகக் கூறி ரசீது வழங்கப்பட்டதைக் கண்டு கார் உரிமையாளர் ஒருவர் அதிர்ச்சியடைந்தார். இந்த மோசடி குறித்து அவர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததையடுத்து, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கில் உள்ள விநியோக இயந்திரங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
சரண் சிங் என்பவர், சமீபத்தில் வாங்கிய தனது புதிய வோக்ஸ்வாகன் விர்டஸ் (Volkswagen Virtus) காரில் பெட்ரோல் கிட்டத்தட்ட காலியாக இருந்த நிலையில், கான்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, காரின் டேங்கை முழுமையாக நிரப்புமாறு ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

ஊழியர்கள் முதலில் சுமார் 41 லிட்டர் பெட்ரோலை நிரப்பியுள்ளனர். இடையில் ஏன் நிறுத்தினார்கள் என்று சரண் சிங் கேட்டபோது, 'அதிக அளவு பெட்ரோலை இரண்டு தவணைகளாகத்தான் நிரப்ப வேண்டும்' என்று அவர்கள் கூறியதாகத் தெரிகிறது. பின்னர் மீண்டும் நிரப்பத் தொடங்கி, முடிவில் 52 லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டதாகக் கூறி ரசீதை வழங்கியுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சரண் சிங், காரின் டேங்க் கொள்ளளவே 45 லிட்டர்தான் எனும் நிலையில், 52 லிட்டர் நிரப்புவது சாத்தியமற்றது என்று கூறி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது ஒரு திட்டமிட்ட மோசடியாக இருக்கலாம் என சந்தேகித்த சரண் சிங், உடனடியாக கார் தயாரிப்பு நிறுவனத்தின் பிரதிநிதியை அந்த இடத்திற்கே வரவழைத்தார். அங்கு வந்த நிறுவன அதிகாரி, காரின் டேங்க் எந்தச் சூழ்நிலையிலும் 45 லிட்டருக்கு மேல் கொள்ளாது என்பதை தொழில்நுட்ப ரீதியாக உறுதிப்படுத்தினார்.
இந்த ஆதாரத்தை எதிர்கொள்ள முடியாமல், பெட்ரோல் நிலைய நிர்வாகம் மழுப்பலான பதில்களை அளித்துள்ளது. இதையடுத்து, உள்ளூர் எடை மற்றும் அளவீட்டுத் துறை அதிகாரிகளின் துணையுடன் இந்த மோசடி நடைபெறுவதாகக் குற்றம்சாட்டி சரண் சிங் முறையான புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் தற்போது ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெட்ரோல் விநியோக இயந்திரங்களில் ஏதேனும் தில்லுமுல்லு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள், பெட்ரோல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்த வாகன உரிமையாளர்களின் நீண்டகால அச்சத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.






















