`எங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம்..!' - அன்புமணி ர...
Aaranya Kaandam Release: "'சப்பை' கேரக்டருக்கும் ஆடிஷன் கொடுத்தேன்; ஆனால்" - குரு சோமசுந்தரம் பேட்டி
தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படமாக இன்றும் கொண்டாடப்படும் படமான 'ஆரண்ய காண்டம்' மீண்டும் ரீரிலீஸ் ஆகிறது. 2011ல் வெளியான இப்படம் ப்ளாக் காமெடி ஜானராகவும் பெயரை அள்ளியது.
'ஆரண்ய காண்டம்' மூலம் சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றிருக்கிறார் படத்தின் இயக்குநரான தியாகராஜன் குமாரராஜா. சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதும் எடிட்டர் பிரவீனுக்குக் கிடைத்திருக்கிறது. தெற்காசிய சர்வதேசத் திரைவிழாவில் கிராண்ட் ஜூரி விருதையும் வென்ற பெருமை இப்படத்திற்கு உண்டு.

ஒரு கேங்ஸ்டர் குரூப்பில் நடக்கிற சிலந்தி வலைப் பின்னல்களே 'ஆரண்ய காண்டம்’ படத்தின் கதை லைன். இப்படத்தில் ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா, குரு சோமசுந்தரம், சம்பத், யாஷ்மின் பொன்னப்பா எனக் கதைக்கான நடிகர்கள் இருக்கிறார்கள். படம் வெளியான போது, இதில் ஜமீன்தார் காளையாக வருகிற குரு சோமசுந்தரமும், அவரது பையனாக வரும் வசந்த்தும் தமிழ் சினிமாவுக்குப் பிரமாதமான வரவுகள் என்று கொண்டாடப்பட்டனர்.
இப்படத்தின் நினைவலைகள் குறித்து குரு சோமந்தரத்திடம் பேசினோம்.
``'ஆரண்ய காண்டம்' படத்தின் கதை, நடிப்பு, வசனம், திரைக்கதை என எல்லாமே சரிவிகிதமான கலவையாகக் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கும். அதனாலேயே ஒரு கிளாசிக் லெவல்ல போயிடுச்சு. நாடகத்துறையிலிருந்த எனக்கு சினிமாவுக்கு என்னை அழைச்சிட்டு வந்தவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாதான்.
அப்ப நான் கூத்துப்பட்டறையில் இருந்தேன். நாடகங்கள் நிறைய நடிச்சிட்டு இருந்தேன். 'ஆரண்ய காண்டம்' படத்தின் கதையை அவர் எழுதுறதுக்கு முன்னாடியே, அதாவது படம் ஆரம்பிக்கிறதுக்கு ஒரு ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடியே நான் நடிச்சிருந்த 'சந்திரகிரி' எனும் நாடகத்தைப் பார்த்திருந்தார் குமாரராஜா. அப்பவே 'என் படத்துல உங்களை நடிக்க வைக்கறேன்'னு சொல்லியிருந்தார்.

படம் தொடங்குறதுக்கு முன்னர் காளையன், சப்பை இந்த ரெண்டு கதாபாத்திரங்களுக்குமே நான் ஆடிஷன் கொடுத்திருந்தேன். ஆனால், டைரக்டருக்கு காளையனாக ஆடிஷன் செய்திருந்தது ரொம்ப பிடிச்சிருந்தது போல, அவருக்கும் எனக்குமே நல்ல அலைவரிசை உண்டு. நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு வர்றவங்களுக்கு சில சிக்கல்களை எதிர்கொள்வாங்க.
அதை எல்லாம் எப்படி எளிதாகச் சமாளிக்கணும்னு எனக்கு கத்து கொடுத்தவர் குமாரராஜாதான். முதல் படத்துலேயே சினிமாவைப் புரிஞ்சுக்க முடிஞ்சது. படத்துல என்னோட மகனாக கொடுக்காப்புளி கதாபாத்திரத்துல நடிச்சிருந்த வசந்தும் நல்லா நடிச்சிருப்பார். படத்துல வரும் ஒவ்வொரு வசனமுமே கவனம் பெற்றது.

படம் பார்த்துட்டு காளையனாக நடிச்சிருக்கறது யாரு, அவர் எங்கே இருக்கார்னு தேட ஆரம்பிச்சிட்டாங்க. வயதானவராக இருப்பாரோனு கூட எண்ணியிருந்தாங்க. அந்த கேரக்டர் செய்யும்போது எனக்கு 35 வயசுதான். குரு சோமசுந்தரம்னு என் பெயர் வெளியே தெரிய ஆரம்பிச்சது.
திரைப்பட விழாக்கள்ல இந்தப் படத்தைப் பாரக்கும் போது, 'இந்த கேரக்டரை எப்படி செய்தீங்க?'னு ஆர்வமாக விசாரிப்பாங்க. காளையன் கேரக்டர் எப்படி பேசணும், குரல் என்ன டோன்ல இருக்கணும்னு குமாரராஜா சொல்லிக் கொடுத்தபடி பேசினேன். படம் வெளியாகி இத்தனை வருஷத்துக்குப் பிறகு மறுபடியும் அந்தப் படத்தின் நினைவுகளை பேசுறது சந்தோஷமா இருக்குது. எனக்கு கிடைக்கற அத்தனை பாராட்டுக்களும் இயக்குநருக்குத்தான் சேரும்'' என்கிறார் தன்னடக்கமாக!




















