நம்பிக்கையின் பாரம்பரியத்தில் புதிய அத்தியாயம்; 67-வது ஷோரூமை திறந்த ஜிஆர்டி ஜுவ...
`AI-யே அடுத்தகட்ட AI-யை உருவாக்குகிறது!' `Pause' கேட்கும் ஆந்த்ரோபிக்! - ஏற்குமா AI நிறுவனங்கள்?
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கற்பனைக்கு எட்டாத வேகத்தில் வளர்ந்து வரும் சூழலில், டெக் உலகையே அதிர வைக்கும் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது 'ஆந்த்ரோபிக்' நிறுவனம். நாம் இதுவரை அறிவியல் புனைகதைப் படங்களில் மட்டும் பார்த்துவந்த ஒரு விஷயம் இப்போது நிஜமாகப் போகிறது.
அதாவது, ஒரு AI, தனக்கு அடுத்த, தன்னைவிட சக்திவாய்ந்த ஒரு AI-யை மனிதர்களின் உதவியின்றி சுயமாகவே உருவாக்கும் நிலை வந்துவிட்டதாக ஆந்த்ரோபிக் எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு, AI-ன் எதிர்காலம் குறித்த விவாதங்களை மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
குளோட் (Claude) AI மாடலை உருவாக்கிய ஆந்த்ரோபிக் நிறுவனம், "முழுமையான ரிகர்சிவ் செல்ஃப்-இம்ப்ரூவ்மென்ட் (full recursive self-improvement)" என்ற இந்த நிலை, AI அமைப்புகளின் மீதான மனிதக் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளது.
அப்படின்னா என்னன்னு கேட்கிறீங்களா?
ரொம்ப சிம்பிள். ஒரு AI அமைப்பு, எந்தவொரு மனிதத் தலையீடும் இல்லாமல் தன்னைத்தானே மேம்படுத்திக்கொண்டு, அடுத்த தலைமுறை AI-யை உருவாக்கும் திறனைப் பெறுவதுதான் இது. போதுமான கம்ப்யூட்டிங் சக்தி இருந்தால், ஒரு AI தனது அடுத்த வாரிசை முழுமையாக வடிவமைத்து உருவாக்கும் எதிர்காலம் வெகு தொலைவில் இல்லை என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆந்த்ரோபிக் தெரிவித்துள்ளது.
இந்தக் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக, ஆந்த்ரோபிக் ஒரு அதிர்ச்சிகரமான புள்ளிவிவரத்தையும் வெளியிட்டுள்ளது. மே 2026 நிலவரப்படி, தங்கள் நிறுவனத்தின் கோட்பேஸில் (codebase) இணைக்கப்பட்ட 80%-க்கும் அதிகமான கோட்களை எழுதியது வேறு யாருமல்ல, அவர்களின் குளோட் AI தானாம்!
ஒரு மென்பொருளை உருவாக்க, சோதிக்க மற்றும் பராமரிக்க டெவலப்பர்கள் பயன்படுத்தும் மாஸ்டர் பிளான் தான் இந்த கோட்பேஸ். AI-யே தனக்கான கோட்களை எழுதும் இந்த நிலை, அதன் சுயாட்சி நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்.
மற்ற AI நிறுவனங்களைப் போலல்லாமல், AI வளர்ச்சியின் தீமைகள் குறித்து அடிக்கடி எச்சரிக்கும் ஆந்த்ரோபிக், இந்த தொழில்நுட்பப் போக்குகள் வரும் ஆண்டுகளில் AI-களை இன்னும் பல மடங்கு சக்திவாய்ந்ததாக மாற்றும் என்கிறது.
"சுயமாக உருவாக்கும் AI, தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கும். அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளில் இது மனிதகுலத்திற்கு அளப்பரிய நன்மைகளைத் தரும்" என்று கூறும் அதே வேளையில், "அவை சுயமாக இயங்கத் தொடங்கும்போது, அவற்றின் நடத்தையைக் கண்காணிப்பதும், பாதுகாப்பதும், வடிவமைப்பதும் இன்னும் முக்கியமானதாகிறது" என்றும் எச்சரிக்கிறது.

இந்தக் கருத்து, மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களாலும் எதிரொலிக்கப்படுகிறது. "AI அமைப்புகளுக்கான கோட்களை AI-களே எழுதத் தொடங்கும் போது, திறனை உருவாக்குவதை விட, அதை ஆளுமை செய்வதுதான் பெரிய சவாலாக மாறும். சுயாட்சி பெறும் அமைப்புகள், மனித முன்னுரிமைகளுடன் இணைந்திருப்பதை உறுதி செய்வதே இத்துறையின் உண்மையான சோதனையாக இருக்கும்" என்கிறார் ஃபியூச்சர் ஷிஃப்ட் லேப்ஸின் இணை நிறுவனர் சாகர் விஷ்னோய்.
தீர்வாகுமா 'பாஸ்' பட்டன்?
இந்த அபாயங்களைச் சமாளிக்க, "பாஸ் கிளாஸ்" (Pause Clause) என்ற ஒரு யோசனையை ஆந்த்ரோபிக் முன்வைக்கிறது. அதாவது, அனைத்து முன்னணி AI நிறுவனங்களும் ஒன்றிணைந்து, அதிநவீன AI ஆராய்ச்சியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். "சமூக கட்டமைப்புகளும், பாதுகாப்பு ஆராய்ச்சிகளும் தொழில்நுட்பத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க, AI வளர்ச்சியை மெதுவாக்க அல்லது தற்காலிகமாக நிறுத்த ஒரு வாய்ப்பு இருப்பது உலகிற்கு நல்லது" என்று நிறுவனம் நம்புகிறது. ஆனால், இந்த யோசனை கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நடைமுறையில் சாத்தியமா என்ற பெரிய கேள்வி எழுகிறது.
"குறைந்த எச்சரிக்கையுடன் செயல்படும் நிறுவனங்கள் தொழில்நுட்ப ரீதியாக மற்றவர்களைப் பிடிக்க இந்த இடைவெளி உதவுமானால், அது அனைவரையும் இன்னும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளிவிடும்" என்றும் ஆந்த்ரோபிக் கவலை தெரிவிக்கிறது. இந்த சிக்கலை AiEnsured நிறுவனத்தின் சி.டி.ஓ., டாக்டர் ஸ்ரீனிவாஸ் பத்மநாபுனியும் சுட்டிக்காட்டுகிறார். "அனைத்து முன்னணி AI மாடல் உருவாக்குநர்களையும் தற்காலிகமாக நிறுத்தச் சொல்வது மிகவும் கடினம். இந்த AI பந்தயத்தில் பின்தங்கி விடுவோமோ என்ற அழுத்தம் எல்லோருக்கும் இருக்கும்" என்கிறார் அவர்.

இருப்பினும், இந்த முயற்சிக்கு ஆதரவும் இல்லாமல் இல்லை. AI கல்வியாளர் அன்ஷ் மெஹ்ரா, "1970-களில் DNA தொழில்நுட்பம் வளர்ந்தபோதும் இதேபோன்ற நிலை ஏற்பட்டது. அப்போது விஞ்ஞானிகள் ஒன்று கூடி, பாதுகாப்பு நெறிமுறைகளைப் பற்றி முதலில் விவாதித்தார்கள். அதுபோல, அனைத்து டெக் நிறுவனங்களும் அடுத்த ஆறு மாதங்களுக்கு புதிய LLM (Large Language Model) வெளியீடுகளை நிறுத்திவிட்டு, AI குறித்த கல்வியறிவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்" என்கிறார்.
ஆனால், மனிதர்கள் AI-யிடம் கட்டுப்பாட்டை இழப்பார்கள் என்ற பயம் எல்லோருக்கும் இல்லை. "நிலைமை மேட்ரிக்ஸ் அல்லது டெர்மினேட்டர் படம் போல மாறும் என்று நான் கவலைப்படவில்லை. ஏனெனில், AI மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக மாறினால், அதன் ப்ளக்கை பிடுங்க மனிதர்களால் எப்போதும் முடியும்" என்று சற்று வித்தியாசமான கோணத்தில் பேசுகிறார் ஷார்ட்ஹில்ஸ் AI-ன் இணை நிறுவனர் பவன் பிரபாத்.
அதே சமயம், "சுயமாக மேம்படும் ஒரு சர்வவல்லமையுள்ள AI மனிதகுலத்திற்கு மகத்தான நன்மைகளைச் செய்ய முடியும். ஆனால் அது சில சமூக விலைகள் இல்லாமல் வராது" என்றும் அவர் எச்சரிக்கிறார். ஆக, AI-ன் வளர்ச்சி என்பது ஒரு பக்கம் வரமாகவும், மறுபக்கம் சாபமாகவும் பார்க்கப்படும் நிலையில், தொழில்நுட்ப உலகம் ஒரு முக்கியமான இடத்தில் நிற்கிறது என்பது மட்டும் நிச்சயம்.



















