`வெறும் காட்சிப் பொருளா ஜான்வி கபூர்?' 'PEDDI' படத்திற்கு எதிராக குவியும் விமர்சனங்கள்
ராம் சரண் - ஜான்வி கபூர் நடிப்பில், ஜூன் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'பெத்தி' திரைப்படம், வெளியானதில் இருந்தே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, இப்படத்தில் ஜான்வி கபூர் நடித்த 'அச்சியம்மா' கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து பார்வையாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கதாநாயகியை ஒரு காட்சிப் பொருளாகவும், பாலியல் ரீதியாகவும் சித்தரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எனினும் இந்த விமர்சனங்கள் படத்தின் இயக்கம் அல்லது ஒட்டுமொத்த கதையம்சத்தை விட, ஜான்வி கபூரின் கதாபாத்திர உருவாக்கத்தையே மையமாகக் கொண்டுள்ளன. 'அச்சியம்மா' கதாபாத்திரம் கதைக்கு எந்த முக்கியத்துவத்தையும் சேர்க்கவில்லை என்றும், ஆண் கதாபாத்திரங்களின் ஆசைப் பொருளாக மட்டுமே காட்டப்பட்டுள்ளதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது அக்கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து, படத்திற்கு எந்தவிதத்திலும் பங்களிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பெரும் விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக சில காட்சிகள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளன. ஒரு பயனர், "படங்களில் கதாநாயகிகளை ஒரு காட்சி பொருளாகக் காட்டுவதை எப்போது நிறுத்தப் போகிறார்கள்? ஒரு காட்சியில் கதாநாயகன் அவளது முகத்தை வர்ணிக்கிறான், ஆனால் கேமரா அவளது இடுப்பையும் மார்பையும் காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், "கதாநாயகிக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக, ஆபாசமான, இழிவுபடுத்தும் மற்றும் பாலியல் ரீதியான காட்சிகளின் தொகுப்பு ஒரு பாத்திரமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது திரையரங்கில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு அவமானம்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்னொரு சர்ச்சைக்குரிய காட்சியும் பலரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு பயனர், "தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு அடியாள் ஜான்வி கபூரை பொது இடத்தில் அவமானப்படுத்த அவரது ஆடையை களைய முயற்சிக்கிறார். வில்லன் அதை ரசித்துப் பார்க்கிறார். கதாநாயகன் அவளை ஆசையுடன் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு, பின்னர் அவர்களை அடிப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அருவருக்கத்தக்க சித்தரிப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் எழும் இந்த எதிர்ப்புகள், படத்திற்கு வெளியான விமர்சனங்களிலும் பிரதிபலிக்கின்றன.


















