உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்தி...
BB Tamil 9 Day 103: த்தூ.. த்தூ.. துப்பி சண்டை! - சாண்டி, கவின்; குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா!
இந்த எபிசோடில் சாண்டி + கவின் என்ட்ரி, ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. சீசன் 3-ல் நிகழ்ந்த ஜாலியான சம்பவங்கள் நினைவில் வந்து போயின.
திவாகர் அபாண்டமாக வார்த்தைகளை இறைக்கிறார் என்பது தெரிந்தும், வினோத் மற்றும் பிரவீன்ராஜ் திவாகரை provoke செய்வது தொடர்கிறது. இதன் விளைவுகள் பார்க்க ரசிக்கும்படியாக இல்லை.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 103
‘இன்னமும் மூன்றே நாட்கள்’ என்கிற countdown அறிவிப்பு வெளியே இருக்க, ‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது.
காலையிலேயே திவாகரை ஒரண்டை இழுக்க ஆரம்பித்தார் வினோத். “ஹேப்பி மாட்டுப் பொங்கல். அதை குளிக்க வெச்சு கூப்பிட்டுட்டு வாங்க.. கொம்புல கட்ட ரிப்பன்லாம் ரெடியா?” என்று பிரவீன் ராஜூம் இதில் இணைந்து கொண்டார். கலையிடம் ஜாடையாக சொல்வது போல இந்தக் கிண்டல் நிகழ்ந்தது.
பொறுத்துப் பார்த்த திவாகர், வெறி கொண்ட வேங்கையாக பாய்ந்து வந்தார். திவாகரை ஆக்ஷன் ஹீரோவாக்கி, தலையில் துண்டு போட விரும்பும் தயாரிப்பாளர்கள் இந்தக் காட்சியை அவசியம் பார்க்க வேண்டும்.
‘புலி உறுமுது. இடி இடிக்குது’ பாடல் பின்னணியில் ஒலிக்காத குறையாக வேகமாக வந்த திவாகர், கையை ஓங்கி “மதுரைக்காரன் அடி எப்படி இருக்கும்ன்னு தெரியும்ல.
அவ்ளதான் பார்த்துக்க’ என்று மிரட்ட ‘அய்யோ.. பயமா இருக்குதுப்பா’ என்கிற மாதிரி வினோத் பாவ்லா செய்தார். பிக் பாஸ் வேறு உள்ளே புகுந்து ‘திவாகர் மைக்கை ஒழுங்கா மாட்டுங்க’ என்று சொல்லி திவாகரின் ஆக்ஷன் மோடில் தண்ணீர் ஊற்றினார்.
மக்களைக் கூட்டி அமர வைத்தார் பிக் பாஸ். (இதற்கே எத்தனை நேரம் ஆயிற்றோ?!) நகைச்சுவை முடிந்த பிறகு ஆக்ஷன் வர வேண்டுமே? ‘முரண்பாடுகளின் தொகுப்பு’ என்று லேபிள் ஒட்டி வீடியோவை ஒலிபரப்ப ஆரம்பித்தார்.

சண்டைக் காட்சி வீடியோவின் நடுவிலேயே சண்டை!
நியாயமாக இந்த வீடியோவை எடிட் செய்ய வேண்டுமென்றால், ஒட்டு மொத்த சீசனின் பெரும்பாலான பகுதியை நாள் கணக்கில் ஓட்ட வேண்டும். இந்த சீசனில் அத்தனை சண்டைகள். என்றாலும் அதில் முக்கியமான ஆக்ஷன் காட்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒளிபரப்பினார்கள். நீண்ட நாள் கழித்து தலைவி பாருவின் அலப்பறையைப் பார்த்த அவரது ரசிகர்கள் கண்கலங்கி நெகிழ்ந்திருப்பார்கள்.
‘நட்பு’ வீடியோவில் என் முகம் ஒருமுறை கூட வரவில்லை என்று கலங்கிய திவ்யாவிற்கு பெரிய ஆறுதல். ‘சண்டை’ வீடியோவில் பல முறை வந்தார். தான் சண்டையிட்ட காட்சிகளைப் பார்த்து ரம்யா வெட்கத்தில் தலைகுனிந்தார். வீட்டில் பாரு இருந்திருந்தால் இன்னமும் ரகளையாக இருந்திருக்கும்.
மக்கள் சண்டை வீடியோ வைப்பார்த்துக் கொண்டிருக்கும் போதே வீட்டில் ஒரு சண்டை வந்ததுதான் காமெடி. திவாகருக்கும் ரம்யாவிற்குமான ஒரு சண்டை டிவியில் ஒளிபரப்பான போது, ‘வாத்தியார்’ படத்தைப் பார்த்து கத்தும் ரசிகன் மாதிரி ‘திவாகரை அப்படியே லெஃப்ட்ல ஒண்ணு போடு ரம்யா’ என்கிற மாதிரி வினோத் குஷியாக கத்த, திவாகருக்கு கோபம் வந்து பீப் வார்த்தைகளை இறைத்தார்.
வினோத் பதிலுக்கு துப்புவது போல் காட்ட, அதற்கு பதிலடியாக திவாகரும் துப்ப, பாவம் சம்பந்தமேயில்லாமல் பக்கத்திலிருந்த பிரஜினின் மீது எச்சி பட்டு விட்டது. ‘த்தூ.. த்தூ..’ சண்டையில் மாட்டிக் கொண்டது பிரஜன்.

திவாகர் - வினோத் - த்தூ.. த்தூ.. துப்பி சண்டை
வீடியோ முடிந்ததும் பிரஜின் இந்த ‘எச்சி’ சண்டையைப் பற்றி ஆவேசமாக பஞ்சாயத்து எழுப்ப திவாகருக்கும் பிரஜனுக்கும் முட்டிக் கொண்டது. “நாம இன்னிக்கு சாயந்திரம் போயிடுவோம். ஃபைனலிஸ்ட் கொண்டாட்டமா இருக்கட்டும். நாம் என்ன விதைக்கிறோமோ, அதுதான் வரும்” என்றெல்லாம் பிரஜன் உபதேசம் செய்ய ‘ஊத்தப்பம்’ காமெடி மாதிரி “அதை அவன் கிட்ட சொல்லு” என்று சுருக்கமாக எதிர்கொண்டார் திவாகர்.
பெரும்பாலான சமயங்களில் வினோத் வம்பிழுப்பதால்தான் பிரச்சினை ஏற்படுகிறது. திவாகர் அதற்கு ஓவர் ரியாக்ட் செய்கிறார். உக்கிரமான சண்டையின் நடுவே ‘ப்ரோ.. ஆப்பிள் ஒண்ணை அவன் கையில் கொடுத்தா கம்முன்னு இருக்கப் போறான்.. இதுக்கு ஏன் டென்ஷன் ஆவறீங்க?” என்று வினோத் சண்டையைக் கலைத்தது காமெடி.
பிரஜன் திவ்யா நட்பைப் பற்றி சான்ட்ரா பொசசிவ் ஆனாரா என்று அவர்களுக்குள் ஒரு மினி பஞ்சாயத்து ஆரம்பித்தது. “வியானாவும் ரம்யாவும் இதைப் பத்தி சொன்னாங்கள்ல..” என்று பிரஜன் ஆரம்பிக்க “ஆமாம். அவங்க சொல்லித்தான் தெரியும். வேணுமின்னா அவங்களையே கூப்பிடலாம்” என்று திவ்யா தொடர “நேரா கேட்டா ஒத்துக்க மாட்டாங்க” என்று பிரஜன் மறுக்க.. இந்தப் பஞ்சாயத்து அதற்குள் அணைந்து போனது. வாசலில் பாட்டு சத்தம் கேட்டதுதான் காரணம்.
திவ்யாவிடம் மிகவும் அனுசரணையாக பிரஜன் நடந்து கொண்டதற்கு சந்தேகப்பட்டு சான்ட்ரா வெடித்த காட்சிகளை நாமே பார்த்தோம். பிறகு ஏன் இதை மழுப்ப நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாவம் பிரஜன். சான்ட்ரா ஏற்படுத்தி வைத்திருக்கும் கறைகளை கழுவியே அவரது காலம் முடிந்து விடும் போலிருக்கிறது.

சாண்டி - கவின் என்ட்ரி - குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா
பக்தியும் தியானமும் கலந்த பாணியில் ‘குருவே சரணம்’ என்கிற பாடல் ஒலித்த போது யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘குருநாதா சரணம்’ என்று வந்த போது பிடித்து விட்டார்கள். வந்தவர் சாண்டி. தனது சிஷ்யனை நீண்ட காலம் கழித்துப் பார்க்கும் செல்லக் கோபத்தில் தோப்புக் கரணம் போட வைத்தார் பிக் பாஸ். பிறகுதான் ‘சிஷ்யா’ என்று அழைத்தார். “உங்கள் வெற்றியைப் பார்த்து பெருமை’ என்று பெருமிதம் கொண்டார்.
சபையைக் கூட்டி அமர வைத்த சாண்டியால், திவாகரின் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘வாயை மூடி தொண்டைக்குள் சிரிப்பதுதான் உங்களுக்கான டாஸ்க்’ என்றாலும் அடுத்த சில நிமிடங்களுக்குள் பேச ஆரம்பித்து விட்டார் திவாகர். “அடுத்த படத்துல வில்லனா நடிக்கறேன். அதுக்கான டிப்ஸ் நீங்கதான் தரணும்” என்று சாண்டி கிண்டலடித்ததை சீரியஸாக எடுத்துக் கொண்டு தலையாட்டினார் திவாகர்.
‘பணப்பெட்டியை எடுத்தது யாரோட முடிவு. நல்ல விஷயம்தான். ஆனா அவசரப்பட்டுட்டியே குமாரு’ என்று வினோத்திற்கும் ஒரு கிண்டல். “என்னங்கய்யா பண்ணீங்க.. என் குருநாதனை.. கதறி எனக்கு வாய்ஸ் நோட்டு அனுப்பறாரு” என்ற சாண்டி, “நடன வடிவமைப்பாளனாக இருந்த என்னை நடிகனாக்கி அனுப்பியது பிக் பாஸ் வீடுதான். தமிழ், மலையாளம், தெலுங்குன்னு நிறைய படங்கள்ல நடிக்கறேன்’ என்றது சிறப்பு.
“வினோத் + திவாகர் காம்போவை மக்கள் ரசிக்க ஆரம்பிச்சாங்க.. ஆனா நீங்களே அதுல குச்சியை விட்டு கலைச்சிட்டீங்க” என்று சாண்டி சொன்னது உண்மை. சாண்டியைத் தொடர்ந்து கவின் என்ட்ரி. (எத்தனை முறை வருவாரோ?!). அவரும் அதே மாதிரியான அட்வைஸை தந்தார். “உங்க காமெடி ஒர்க்அவுட் ஆகணும்னா give and take policy இருக்கணும்” என்று சொன்னார் கவின். (நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்ட அதே விஷயம்).

“நீங்க சீசன்3-ல வந்து மாட்டியிருக்கணும்.. ஒண்ணு நான் சீக்கிரம் எலிமினேட் ஆகியிருப்பேன். உங்களைத் துரத்தியிருப்பேன்” என்று திவாகரிடம் சாண்டி சொன்னது சுவாரசியம். சாண்டியும் கவினும் இணைந்து நடிக்கப் போகின்ற திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
இறுதிப்போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து அவர்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், பயண வீடியோ ஆகியவற்றைக் காண்பித்து ஊக்க உரை தந்து அனுப்புவது பிக் பாஸின் வழக்கமான சடங்கு. முதல் நபராக விக்ரமிற்கு இது நிகழ்ந்தது. “உங்களுக்கு பெருமை சேர்ப்பேன். பிக் பாஸ் ஹோஸ்ட்டாக வருவேன்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் விக்ரம்.
இது முடிந்ததும் வீட்டிற்குள் நுழைந்து சென்டிமென்ட்டாக ஆரம்பித்து “அப்படியெல்லாம் சீனே இல்ல. மூடிட்டு படுங்கடா” என்று டிவிஸ்ட் தந்தது ஜாலியான காட்சி.
இன்னமும் இரண்டு நாள். வெற்றியாளர் யார் என்று தெரிந்து விடும். ஆனால் அந்த பரபரப்பும் ஆர்வமும் துளியும் இல்லாத சீசன் இது மட்டும்தான்.!




















