Narges Mohammadi: அமைதிக்கான நோபல் வென்றவருக்கு 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - கா...
Cyber: ரூ.1700 மதிப்புள்ள ஆடையை ஆர்டர் செய்து ரூ.6.82 லட்சத்தை இழந்த பெண்; என்ன நடந்தது?
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசிக்கும் பெண் ஒருவர் “Biba.in” என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ.1700 மதிப்புள்ள ஆடை ஒன்றை ஆர்டர் செய்தார். அவர் பணத்தை ஆன்லைனில் செலுத்தாமல் ஆடையை வாங்கிய பிறகு பணம் கொடுப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் ஆர்டர் செய்த அடுத்த நாள் சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு Biba.in நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி ஒருவர் போன் செய்தார்.
அந்த நபர் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கான டெலிவரி முகவரி நாசிக்கில் இருப்பதாகக் கூறி டெலிவரி செய்ய முடியாது என்று தெரிவித்தார்.
அதேசமயம் ஆடைக்கான பணத்தை முன்கூட்டியே செலுத்தினால் வேறு ஒரு ஏஜென்சி மூலம் ஆடையை உங்களது முகவரிக்கே அனுப்பி வைப்பதாக அந்த நபர் தெரிவித்தார். உடனே அப்பெண் அந்த நபர் அனுப்பிய கியூஆர் கோடு மூலம் ரூ.1700.05 அனுப்பி வைத்தார்.

பணம் அனுப்பியவுடன் ஆன்லைன் வெப்சைட்டைச் சேர்ந்த நபர் அப்பெண்ணிற்கு போன் செய்து, நீங்கள் ரூ.1700.50 அனுப்புவதற்குப் பதில் ரூ.1700.05 அனுப்பி இருக்கிறீர்கள் எனவே மீண்டும் ரூ.1700.50 அனுப்புங்கள் என்றும், நீங்கள் ஏற்கனவே அனுப்பிய பணத்தை உங்களுக்குத் திரும்ப அனுப்பி விடுவோம் என்று தெரிவித்தார்.
அப்பெண்ணும் மீண்டும் ரூ.1700.50 அனுப்பி வைத்தார். ஆனால் அதேநபர் மீண்டும் போன் செய்து, நீங்கள் அனுப்பிய பணம் கிடைக்கவில்லை என்றும், மீண்டும் அனுப்பும்படியும், ஏற்கனவே அனுப்பிய பணத்தைத் திரும்ப கொடுத்துவிடுவதாக உறுதியளித்தார்.
அப்பெண்ணும் அனுப்பி வைத்தார். இரண்டு நாளில் அப்பெண் 10 ஆன்லைன் டிரான்ஸ்பர் மூலம் ரூ.6.82 லட்சத்தை அனுப்பி வைத்தார். இதில் 5 முறை ரூ.90 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை அனுப்பினார். ஆனாலும் அவர் ஆர்டர் செய்த ஆடை டெலிவரி செய்யப்படவில்லை.
ஆனால் அக்கம்பெனியைச் சேர்ந்த மேலும் ஒருவர் போன் செய்து, மேலும் ரூ.2 லட்சம் டிரான்ஸ்பர் செய்யும்படியும், ஏற்கனவே அனுப்பிய பணத்தை உங்களுக்குத் திரும்ப அனுப்பிவிடுவோம் என்றும் தெரிவித்தார். ஆனால் இம்முறை அப்பெண் சந்தேகம் அடைந்து இது குறித்து தனது கணவரிடம் கலந்து ஆலோசித்தார். அவரது கணவர் இது மோசடி என்று தெரிவித்தார்.
அதன் பிறகுதான் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் புனே சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


















