IND vs ENG: அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்ற இந்...
IND vs ENG: அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்ற இந்திய அணி!
U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஆயுஷ் மத்ரே முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக ஆரோன் ஜார்ஜ் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களம் இறங்கினர். தொடக்கத்திலேயே ஆரோன் ஜார்ஜ் தனது விக்கெட்டை இழந்தார்.

அதிரடி காட்டிய சூர்யவன்ஷி
அதன்பின் களம் இறங்கிய கேப்டன் ஆயுஷ் மாத்ரே ஒரு முனையில் பொறுமையாக ஆடி வர, மறுமுனையில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார்.
பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆயுஷ் மாத்ரே அரைசதம் கடந்த நிலையில் க்ரீன் ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களம் இறங்கிய வீரர்கள் அனைவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்துத் 26-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
விக்கெட்களை இழந்த இங்கிலாந்து...
இதன் மூலம் இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் எடுத்தது.
இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சில் திணறி ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்தது.
தொடக்கத்திலிருந்து பொறுமையாக விளையாடிய பென் டவ்கின்ஸ் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.

சாதனைப் படைத்த இந்திய அணி!
நம்பிக்கை அளிக்கும் வகையில் காலேப் ஃபால்கனர் மற்றும் ஜேம்ஸ் மின்டோ இணை பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினாலும், அந்த முயற்சி நீண்ட நேரம் கைக்கொடுக்கவில்லை.
அதிகபட்சமாக காலேப் பால்கனர் 115 ரன்கள் எடுத்து கடைசி வரை போராடினார். இறுதியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் மட்டுமே எடுத்து, 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
175 ரன்கள் எடுத்த வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா தனது 6-வது U-19 உலகக்கோப்பை பட்டத்தை வென்று சாதனைப் படைத்திருக்கிறது.


















