`ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை; ஆனால் பழனிசாமி பாராட்டுகிறா...
`பாபா' கடைப் பெயர் சர்ச்சை; இஸ்லாமியருக்கு ஆதரவாக நின்ற `முகமது தீபக்' - வெடித்த போராட்டம், பதற்றம்!
முஸ்லிம் கடைக்கு `பாபா' பெயர்
உத்தரப்பிரதேசத்தில் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதனை மதரீதியாக பிரித்து பார்ப்பது வழக்கமாக மாறி இருக்கிறது. அங்குள்ள கோட்வார் என்ற நகரில் வசிக்கும் மொகமத் சோயப் என்பவர் பாபா என்ற பெயரில் ஒரு கடை நடத்தி வந்தார். இதற்கு உள்ளூர் பஜ்ரங் தள அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அதே நகரில் இருக்கும் பிரபலமான சித்தபலி பாபா ஹனுமான் கோயிலை பிாதிபலிக்கும் வகையில் மொகமத் சோயப் தனது கடைக்கு பாபா என்று பெயர் வைத்திருப்பதாகவும், முஸ்லிம் பிரமுகர் ஒருவர் இது போன்ற பெயரில் கடை வைத்திருப்பது இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாக இருக்கிறது என்று கூறி, கடையின் பெயரை மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
கடையை வேறு இடத்திற்கு மாற்ற இருப்பதாகவும், கடையை வேறு இடத்திற்கு மாற்றியதும் கடையின் பெயரையும் மாற்றி விடுவதாக மொகமத் சோயப் உறுதியளித்தார். இதையடுத்து பஜ்ரங் தள உறுப்பினர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். சோயப் கடந்த மாத மத்தியில் தனது கடையை சிறிது தூரத்திற்கு மாற்றி வைத்தார்.

ஆனால் சொன்னபடி கடை பெயரை மாற்றாமல் தொடர்ந்து பாபா என்ற பெயரில் கடையை திறந்தார். இதனால் பஜ்ரங் தளத்தினர் மீண்டும் கடை முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் கைகலப்பாக மாறியது.
தீபக் குமார்.... மொகமத் தீபக்
கடந்த 28-ம் தேதி பஜ்ரங் தளத்தினரும், சோயப் ஆதரவாளர்களும் கடை முன்பு மோதிக்கொண்டனர். மோதலின் போது உடனிருந்தவர்களில் ஜிம் உரிமையாளரான தீபக் குமார் கலவரத்தை தடுக்க முயன்றார். அவர் போராட்டக்காரர்களிடம் போராட காரணம் கேட்டு வாக்குவாதம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. சோயப் கடை பெயருக்கு எதிராகப் போராடியவர்கள் தீபக் குமாரிடம், `நீ என்ன மதம்?' என்று கேள்வி எழுப்பினர். உடனே அவர் தனது பெயர் `மொகமத் தீபக்' என்று தெரிவித்தார். அவரின் இப்பதிலும் சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது.
பெயரை மாற்றிக்கொண்டது குறித்து தீபக் குமார் கூறுகையில், ''நான் இந்து, என் மதத்தில் பெருமை கொள்கிறேன். ஆனால் அதற்கு முன் நான் இந்தியன். ஒருவரையொருவர் எதிரிகளாகக் கருதினால், இந்த நாடு எப்படி முன்னேறும்?" என்று கேள்வி எழுப்பினார்.
கடையின் பெயர் பிரச்னை பின்னுக்குத் தள்ளப்பட்டு தீபக் தனது பெயரை மொகமத் தீபக் என்று மாற்றிக்கொண்டது சமூக வலைதளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது. சிலர் அவரை வகுப்புவாத எதிர்ப்பின் அடையாளம் என்று தெரிவித்தனர். மற்றவர்கள் வேண்டுமென்றே தீபக் மத உணர்வுகளைத் தூண்டுவதாக குற்றம்சாட்டினர்.
கடந்த 31ம் தேதி மீண்டும் பதற்றம் அதிகரித்தது. கோட்வாருக்கு வெளியில் இருந்து வந்த சிலர் உட்பட ஏராளமானோர் சோயப்பின் கடைக்கு வெளியே கூடினர். அவர்கள் தீபக் இணையத்தில் சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டதாகக் குற்றம்சாட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். போலீஸார் விரைந்து வந்து வன்முறை ஏற்படவிடாமல் தடுத்தனர். மேலும் இரு தரப்பினரையும் அழைத்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதில் சோயப் கடை தொடர்ந்து பாபா பெயரில் செயல்படும்.
மேற்கொண்டு யாரும் போராட்டம் நடத்தக் கூடாது என்று போலீஸார் எச்சரித்தனர். மேலும் சட்டம் ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கதை சீர்குலைக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர். போலீஸ் அதிகாரி சந்திரமோகன் இது குறித்து கூறுகையில், ``தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் அமைதியை நிலைநாட்டவும், சர்ச்சைகள் தலைதூக்காமல் தடுக்கவும் முன்னுரிமை கொடுத்து வருகிறது'' என்று கூறினார்.
போலீஸார் இச்சம்பவங்கள் குறித்து 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அதில் இரண்டு வழக்கு போராட்டம் நடத்தியவர்கள் மீதும், ஒரு வழக்கு தீபக் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வன்முறை பரவுவதை தடுக்க கோட்வார் முழுவதும் போலீஸார் கொடி அணிவகுப்புகளை நடத்தினர். முக்கிய இடங்களில் அதிக அளவில் பாதுகாப்புக்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நகரத்தின் நுழைவுவாயில்களில் வாகனச் சோதனையை தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையில் இப்பிரச்னைகளால் தீபக்கின் உடற்பயிற்சி கூடம் கடந்த பல நாள்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் தீபக்கிற்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மாத வாடகை மட்டும் ரூ.50,000 வரை செலுத்த வேண்டும். மேலும் தீபக் மற்றும் அவரது மனைவி, தாய் மற்றும் இளம் மகள் உட்பட அவரது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்தும் தீபக் அச்சம் அடைந்துள்ளார்.



















