Jaya Bachchan: `செல்ஃபி எடுக்க முயன்றவருக்கு ஒரு குத்து' - கோபம் ஏன்? - ஜெயா பச்சன் விளக்கம்
நடிகர் அமிதாப்பச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயாபச்சன் தற்போது சமாஜ்வாடி கட்சி சார்பாக எம்.பியாக இருக்கிறார்.
ஜெயாபச்சன் எப்போதும் சற்று கோபப்படக்கூடியவர். அதுவும் அருகில் புகைப்படம் எடுக்க யாராவது வந்தால் அவர்களை திட்டித்தீர்த்துவிடுவார்.
நேற்று டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூசன் கிளப் கேட்டில் நின்று ஜெயாபச்சன் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். அந்நேரம் அவரது அருகில் வந்த ஒருவர் ஜெயாப்ச்சனிடம் கேட்காமல் செல்பி எடுத்துக்கொண்டிருந்தார். அதனை பார்த்து ஜெர்க்கான ஜெயாபச்சன் செல்பி எடுத்த நபரை அவரது நெஞ்சில் தனது கையால் குத்தி விட்டு, `என்னாது' என்று கோபத்தோடு கேட்டார்.
அதோடு அவரை நோக்கி கடும் கோபத்தோடு பார்த்தார். அவரது கோபத்தை கண்ட செல்பி எடுத்த நபர் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
ஜெயாபச்சனுக்கு பின்னால் சிவசேனா(உத்தவ்) எம்.பி.பிரியக்கா சதுர்வேதி நின்று கொண்டிருந்தார். ஜெயாபச்சனின் செயலை கண்டு அருகில் நின்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஜெயாபச்சன் நடந்து கொண்ட வித வீடியோ காட்சி சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது.
இதற்கு முன்பு ஒரு முறை தனது அருகில் அடுத்தவர்களை வர விடாதது குறித்து ஜெயாபச்சனிடம் நிருபர்கள் கேட்டதற்கு, தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுபவர்களை நான் வெறுக்கிறேன். நான் இவ்வாறு நடந்து கொள்வது புதிதல்ல. ஆரம்பத்தில் இருந்தே இது போன்றுதான் நடந்து கொண்டிருக்கிறேன்.
என் வேலையைப் பற்றிப் பேசினால் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, அவள் ஒரு மோசமான நடிகை, இந்தப் படத்தை மோசமாகச் செய்தாள், அவள் அழகாக இல்லை' என்று சொல்லுங்கள், ஏனென்றால் அது காட்சி ஊடகம். அதை நான் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் மற்றவற்றை நான் எதிர்க்கிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார். அதனால் மும்பையில் அவர் அருகில் பத்திரிகையாளர்கள் செல்லவே பயப்படுவார்கள்.