சேலம்: `10 வருஷமாகியும் குழந்தைக்கு பிறப்பு சான்று கிடைக்கல'- அலட்சிய அதிகாரிகள்...
Musical Road: ரோட்ல பாட்டுக் கேக்குமா? இந்தியாவின் முதல் இசைச் சாலை! - எங்கு இருக்கிறது தெரியுமா?
இந்தியாவின் முதல் இசைச் சாலையானது மும்பையின் நரிமன் பாயின்ட்டிலிருந்து வொர்லி செல்லும் வடக்கு நோக்கிய பாதையில் அமைந்துள்ளது. அங்குள்ள சுரங்கப்பாதையிலிருந்து வெளியே வந்த சிறிது தூரத்தில் சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு இந்த சிறப்புச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் செல்லும்போது, ஆஸ்கார் விருது பெற்ற `ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பிரபலமான `ஜெய் ஹோ’ (Jai Ho) பாடல் ஒலிக்கும்.

இது எப்படிச் செயல்படுகிறது என்றால், சாலையின் தார் பரப்பில் குறுக்கே குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய மேடுபள்ளங்கள் (Rumble Strips) செதுக்கப்பட்டிருக்கும். வாகனத்தின் டயர்கள் இந்த வரிசையான மேடுபள்ளங்களின் மீது செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாக இசை கேட்கும். புல்லாங்குழலில் துளைகளின் இடைவெளி எப்படி வெவ்வேறு ஒலியை எழுப்புகிறதோ, அதேபோல சாலையில் உள்ள பள்ளங்களின் இடைவெளி இசையின் ஸ்வரங்களை உருவாக்குகிறது.
இந்த இசையைத் தெளிவாகவும் இனிமையாகவும் கேட்க, வாகனத்தை மணிக்கு 60 முதல் 80 கி.மீ வேகத்தில் சீராக ஓட்ட வேண்டும். வேகம் குறைந்தால்பாடல் மிகவும் மெதுவாக (Low pitch) கேட்கும். குறிப்பிட்டதை விட வேகம் அதிகரித்தால் பாடல் மிக வேகமாக, கீச்சுக்குரலில் (High pitch) கேட்பது போல் இருக்கும்.
இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவிற்குப் புதிது என்றாலும், உலகின் பல நாடுகளில் இது ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது. உலகின் முதல் இசைச் சாலை 1995-ம் ஆண்டு டென்மார்க்கில் உருவாக்கப்பட்டது. ஜப்பானில் இவை மெலடி சாலைகள் (Melody Roads) என்று அழைக்கப்படுகின்றன. தென் கொரியாவில் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் பாடும் சாலைகள் (Singing Roads) அமைக்கப்பட்டன. கலிபோர்னியா, லான்காஸ்டர் நகரில் உள்ள சாலையில் மேற்கத்திய செவ்வியல் இசை ஒலிக்கிறது. ஓட்டுநர்கள் தூங்குவதைத் தவிர்க்கவும், விழிப்புடன் இருக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த இசைச் சாலைக்கான ஐடியாவே ஒரு `விபத்தான’ கண்டுபிடிப்புதான். ஜப்பானில் ஷிசுவோ ஷினோடா (Shizuo Shinoda) என்ற பொறியாளர் புல்டோசர் மூலம் சாலையைச் சுரண்டிக் கொண்டிருந்தபோது, தற்செயலாக உருவான பள்ளங்கள் இசையை எழுப்புவதைக் கண்டுபிடித்தார். இதுவே ஜப்பானில் மெலடி சாலைகள் உருவாகக் காரணமானது. இது வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல. ஓட்டுநர்கள் இசையைச் சரியாகக் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் சரியாகச் செல்வார்கள். இது விபத்துகளைக் குறைக்க உதவுகிறது என்பதும் நிரூபணமாகியுள்ளது.
















