முதல்வர் செயலக அலுவலகம் புதுபிப்பு: ரூ.5.54 கோடிக்கு டெண்டர்; `ரூ.3.78 கோடி போது...
Rain Alert: ``சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை" - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று (செப். 4) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலச் சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழ்நாட்டின் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை மாநிலத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை தொடரும். அதைத் தொடர்ந்து 9-ம் தேதி வட தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும்.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் பெரிய அளவில் மாற்றமின்றி இயல்பை ஒட்டி வெப்பநிலை பதிவாகும். இருப்பினும், உள் தமிழகத்தில் செப்டம்பர் 7-ம் தேதி வரை வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து காணப்படலாம்.
வியாழக்கிழமை (நேற்று) பதிவான தரவுகளின்படி, பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 40.2°C வெயில் பதிவாகியுள்ளது. திருச்சி, தஞ்சாவூர், மதுரை, ஈரோடு ஆகிய பகுதிகளிலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் கொளுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் திருவாதவூர், ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் மற்றும் வாலாஜா ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், ஆற்காட்டில் 40 மி.மீ., ஏற்காடு, மாமல்லபுரம், செய்யூர், ஆரணி மற்றும் சிட்டம்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 30 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது" எனக் கூறப்பட்டிருக்கிறது.
















