அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள் - வேளாண்மை துறை அமைச்சர் ...
Soft Baseball: நேபாளத்தில் தங்கம் வென்ற தமிழ்நாடு மாணவிகள்: உலகக்கோப்பையை வெல்ல தீவிர பயிற்சி !
விளையாட்டு உலகில் கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் போன்ற போட்டிகள் அனைவருக்கும் பரிச்சயமானவை. ஆனால், பலருக்கும் அதிகம் அறிமுகமில்லாத சாஃப்ட் பேஸ்பால் (Soft Baseball) விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.
நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற தெற்கு ஆசிய அளவிலான சாஃப்ட் பேஸ்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவு மற்றும் தாய்லாந்து ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்றன. இந்திய அணியில் மொத்தம் 20 மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஐந்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் கோயம்புத்தூர், மூன்று பேர் சேலம்.
அவர்களில் சேலத்தைச் சேர்ந்த லாரண்யா, அபிநயா மற்றும் தன்ஷிகா ஆகிய மூன்று மாணவிகள் இந்திய அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.





இந்த வெற்றிக்குப் பின்னால் கடின உழைப்பும், தொடர்ச்சியான பயிற்சியும் இருப்பதாக மாணவிகள் தெரிவித்தனர். சாஃப்ட் பேஸ்பால் விளையாட்டைப் பற்றி பேசிய தன்ஷிகா, “இந்த விளையாட்டை முதன்முதலில் எங்களுக்கு ஸ்போர்ட்ஸ் டீச்சர் அறிமுகப்படுத்தினார்.
அதன் பிறகு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பயிற்சி எடுத்தோம். சேலத்தைச் சேர்ந்த ராஜு சார் எங்களுக்கு பயிற்சி அளித்தார். ஆரம்பத்தில் இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. ஆனால் பயிற்சி பெற்ற பிறகு இந்த விளையாட்டின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது,” என்றார்.
லாரண்யா கூறுகையில், “எந்தத் துறையிலும் வெற்றி பெற விடாமுயற்சி அவசியம். இந்த வெற்றிக்காக நாங்கள் பல மாதங்கள் கடுமையாக உழைத்தோம். எங்களது பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து ஆதரித்தார்கள். அதுவே எங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது” என்றார்.
இறுதிப்போட்டி குறித்து அபிநயா பேசும்போது, “நேபாள அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டி மிகவும் சவாலானதாக இருந்தது.
இந்திய அணி 91 புள்ளிகள் எடுத்தது. நேபாளம் 86 புள்ளிகள் எடுத்ததால் ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினோம். இந்த விளையாட்டை மேலும் பலர் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று தெரிவித்தார்.





சர்வதேச போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்த மூன்று மாணவிகளின் அடுத்த இலக்கு உலகக்கோப்பை. இலங்கையில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்காக தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெற்கு ஆசிய அளவில் தங்கம் வென்றுள்ளோம். அடுத்ததாக உலக அரங்கிலும் இந்தியாவின் கொடியை உயரப் பறக்கச் செய்வோம் என மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

















