கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டியின் கையைத் தொட்டுப் பேசிய இயக்குநர் - கண்டிக்கு...
`நேரலை துண்டிப்பு; பள்ளிகளில் அரசியல் தலைவர் படங்கள்' - அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன பதில் என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இதற்கு அதிமுக தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ``மாணவர்களைக் கஷ்டப்படுத்தும், அவர்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் எந்தவொரு தேர்வு முறையும் வேண்டாம் என்பதே எங்களின் உறுதியான கொள்கை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் இதையேதான் சொன்னோம், இப்பொழுதும் அதில் உறுதியாக இருக்கிறோம்.
இருப்பினும், தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருப்பதால், மாணவர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க தொடர் கவுன்சிலிங் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த விரிவான திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அவையில் மிகப்பெரிய அசாதாரண சூழலோ அல்லது அவைக்குறிப்பிற்கு முரணான ஆபாச வார்த்தைகளோ வரும்போது வேண்டுமானால் நேரலையைத் தவிர்க்கலாம். ஆனால், அவை சுமுகமாகத்தான் சென்றது. நான் அவைக்குள் இருந்ததால் நேரலை துண்டிக்கப்பட்டது குறித்து உடனடியாகத் தெரியவில்லை, வெளியே வந்த பின்னரே அறிந்தேன்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி, மீதமுள்ள நாட்களில் நேரலை தடையின்றித் தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவையில் எவ்வித வன்முறையும் நடக்கவில்லை.
பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் அரசியல் தலைவர்களின் படங்களை மாட்டுவதற்குப் பதிலாக, நம் மண்ணின் மைந்தர்களான ஏ.பி.ஜே. அப்துல் கலாம், இஸ்ரோ சிவன், மயில்சாமி அண்ணாதுரை போன்ற விஞ்ஞானிகள் மற்றும் சாதனையாளர்களின் படங்களை மாட்ட வேண்டும். அதை விடுத்து அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை எந்தக் கட்சியினரும் மாட்ட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் மகிழ்வார்." என்றார்.













