கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டியின் கையைத் தொட்டுப் பேசிய இயக்குநர் - கண்டிக்கு...
'மணிரத்னம், கமல்ஹாசன் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்தது தான்.!'- லெனின் பாரதி பேசியதென்ன?
மீரா கதிரவனின் இயக்கத்தில், கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'ஹபீபி'.
இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்று (ஜூன். 19) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் லெனின் பாரதி, " 'ஆடிவெள்ளி' முதல் சமீபத்தில் வெளியான 'கருப்பு' படம் வரைக்கும் ஒரு மதத்தையோ, மதத்தின் உடைய மூடநம்பிக்கைகளை பற்றியோ எடுக்கிறார்கள்.

தியேட்டரில் சாமி எல்லாம் ஆடுகிறார்கள். இதுபோன்ற படங்களுக்கு பெரிய பெரிய தயாரிப்பாளர்களும், இசையமைப்பாளர்களும், நடிகர்களும் துணை நிற்கிறார்கள்.
ஆனால் ஒரு இஸ்லாமியர்களின் வாழ்க்கையை எடுக்கும்போது இதெல்லாம் நடப்பதில்லை. இந்தப் படத்திற்கு பின் அத்தனை கைவிரிப்புகள் இருக்கின்றன.
மீரா கதிரவன் ஒரு இஸ்லாமியரின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை எடுக்க ஆரம்பித்தபோது எத்தனையோ தொழில்நுட்ப வல்லுநர்கள் கலைஞர்கள் இதை நிராகரித்திருக்கிறார்கள்.
அவர்களின் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் தமிழ் சூழல் அப்படித்தான் இருக்கிறது. பல முகங்கள் பொதுவெளியில் பேசும்போது ஒரு மாதிரி இருப்பார்கள்.
இந்த மாதிரி படங்களுக்கு பங்களிக்கும்போது அவர்களின் முகம் வேறொன்றாகவும் இருக்கிறது. அந்தவகையில் இந்தப் படத்திற்கு துணை நின்ற அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி.

மணிரத்னம், கமல்ஹாசன் போன்ற கலைஞர்கள் அவர்களது மிக முக்கியப் படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்தது பொதுபுத்தியில் மிக அழகாக ஆக்கிரமித்திருக்கிறது.
குறிப்பாக 'விஸ்வரூபம்' மாதிரியான படங்கள் தான் 'கேரளா ஸ்டோரி', காஷ்மீர் பைல்ஸ், 'துரந்தர்' மாதிரியான படங்களுக்கு அடித்தளமாக இருந்திருக்கிறது. வெறுப்பு அரசியலுக்கு அடித்தளமாக இருப்பதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.



















