T20 WC: வருண் சக்ரவர்த்தி மாயாஜாலம்: தோல்வியே சந்திக்காத அணியாக சூப்பர் 8-க்குள்...
T20 : 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சுற்றுடன் வெளியேறிய ஆஸ்திரேலியா - சாம்பியன் அணி வீழ்ந்தது எங்கே?
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலியா என்றாலே ஒரு மிரட்டலான அணி என்ற பிம்பம் உண்டு.
ஒருநாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் அந்த அணி, சமீபகாலமாக டி20 போட்டிகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறி வருகிறது.

அந்தவகையில் தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் முதல் சுற்றுடன் ஆஸ்திரேலிய அணி வெளியேறியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
2009 ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 உலகக்கோப்பையில் இருந்து ஆஸ்திரேலிய அணி இவ்வளவு சீக்கிரமாக வெளியேறுவது இதுவே முதல் முறை. ஆஸ்திரேலிய அணியின் இந்த சறுக்கலுக்கு காரணம் என்ன?
முக்கிய வீரர்கள் அணியில் இல்லாதது..!
ஆஸ்திரேலிய அணியின் பலமே அவர்களின் வேகப்பந்து வீச்சுதான்.
ஆனால் இந்த முறை பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியதும், மிட்செல் ஸ்டார்க் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அனுபவமில்லாத பந்துவீச்சு வரிசையுடன் களம் இறங்கியது அந்த அணிக்கு மிகப்பெரிய பலவீனம்.

ஜிம்பாவேவிடம் கண்ட அதிர்ச்சி தோல்வி
இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சிக்கு விதை போட்டது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிதான்.
கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சிறிய அணியான ஜிம்பாப்வே 20 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 169 ரன்களை எடுத்தது.
ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 170. ஆனால் பவர்ப்ளேவில் 4 விக்கெட்டுகளை இழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதுவே அவர்களின் தன்னம்பிக்கையைச் சிதைத்து தொடரின் விளிம்பிற்குத் தள்ளியது.
மிடில் ஆர்டர் பேட்டிங் சரிவு
இலங்கைக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில், ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 104 ரன்கள் எடுத்து ஒரு கட்டத்தில் வலுவாக இருந்தது.
ஆனால் அதன் பிறகு 77 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் (10 விக்கெட்டுகள்) இழந்து தவித்தது.

அதுமட்டுமின்றி இந்தப் போட்டியில் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் கொடுத்த அதிரடித் தொடக்கத்தை மிடில் ஆர்டர் பேட்டர்கள் பயன்படுத்தத் தவறினர்.
தவிர கிளென் மேக்ஸ்வெல் போன்ற சீனியர் வீரர்கள் ரன் எடுக்கத் திணறியது அணிக்கு பின்னடைவாகியது.
பதும் நிசாங்காவின் விஸ்வரூபம்
இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுத்தாலும், இலங்கை வீரர் பதும் நிசாங்கா வெறும் 52 பந்துகளில் சதம் விளாசி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். ஆசிய ஆடுகளங்களில் போதிய அனுபவம் இல்லாத ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்களால் இலங்கை பேட்டர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

துரதிர்ஷ்டவசமான மழை
ஆஸ்திரேலியாவின் கடைசி நம்பிக்கை, அயர்லாந்து அணி ஜிம்பாப்வேயைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான்.
ஆனால் அந்தப் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது. இதனால் ஜிம்பாப்வேக்கு ஒரு புள்ளி வழங்கப்பட, அவர்கள் 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
ஆஸ்திரேலிய அணி அதிகாரப்பூர்வமாக டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறி ஏமாற்றத்துடன் நாடு திரும்பி இருக்கிறது.!




















