'அமித் ஷா, அஷ்வினி வைஷ்ணவ்வும் எனக்கு வாழ்த்து சொன்னங்க; தனிப்பட்ட முறையில் பாஜக...
`அடிமையாக்கும்’ வகையில் வடிவமைப்பு'- இன்ஸ்டா, பேஸ்புக்குக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!
இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக ஊடக தளங்கள் பயனர்களை தங்களுக்கு அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) குற்றம் சாட்டியுள்ளது.
ஐரோப்பிய ஆணையம் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வந்த விசாரணையின் ஆரம்பகட்ட முடிவுகளை அண்மையில் வெளியிட்டது. அதில், மெட்டா நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 'டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை' (DSA) மீறியுள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் செயலிகள் பயனர்களின் உடல் மற்றும் மன நலனுக்கு ஏற்படுத்தும் அபாயங்களை மெட்டா நிறுவனம் சரியாக மதிப்பீடு செய்யத் தவறிவிட்டது. சமூக ஊடகப் பயன்பாடு இளைஞர்களின் மனநலனைப் பாதித்து, பதற்றம் மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று பல ஆய்வுகள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளன.
இதன் காரணமாகவே, சமீபத்திய ஆண்டுகளில் உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, தானாகவே இயங்கும் வீடியோக்கள் (Autoplay videos), தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள் (Personalised recommendations) மற்றும் எல்லையே இல்லாத 'இன்ஃபினிட் ஸ்க்ரோலிங்' (Infinite scrolling) போன்ற அம்சங்கள் பயனர்களின் மூளையை ஒருவித ‘சுயஇயக்க நிலைக்கு’ (Autopilot mode) தள்ளுகிறது.
இது ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களுக்கும், செயலிகளுக்கு அடிமையாவதற்கும் வழிவகுக்கிறது என்பதால், இந்த ‘அடிமையாக்கும் முக்கிய அம்சங்களை’ மெட்டா நிறுவனம் உடனடியாக முடக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளுக்கு இணங்க, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் செயலிகளின் Default settings மாற்றங்களைச் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தனது தொழில்நுட்ப விதிகளை மெட்டா நிறுவனம் தொடர்ந்து மீறினால், அதற்கு மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்படும். பயனர்களின் ‘கட்டாயப் பயன்பாட்டை’ கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக, தங்களது செயலிகளின் வடிவமைப்பில் சில முக்கிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பென் வால்டர்ஸ், ``ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த ஆரம்பகட்ட விசாரணை முடிவுகளை திட்டவட்டமாக மறுக்கிறோம். பதின்ம வயது இளைஞர்களைப் பாதுகாப்பதற்காக எங்களது நிறுவனம் ஏற்கனவே பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணை முடிவுகள் எங்களது பாதுகாப்பு முயற்சிகளைத் துல்லியமாகக் கணக்கில் கொள்ளவில்லை." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகளுக்குப் பதிலளிக்க மெட்டா நிறுவனத்திற்கு இன்னும் சில மாதங்கள் அவகாசம் உள்ளது. அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும். ஒருவேளை மெட்டா நிறுவனத்தின் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால், அந்த நிறுவனத்தின் உலகளாவிய வருடாந்திர வருவாயில் 6 சதவீதம் வரை அபராதமாக விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.













