சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வ...
அதிகரிக்கும் 'Boss Scam' மோசடி: தனியார் நிறுவன ஊழியர்களுக்கு செபி அவசர எச்சரிக்கை!
நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEO) மற்றும் மூத்த அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, ஊழியர்களிடம் பணம் பறிக்கும் 'பாஸ் ஸ்கேம்' மோசடிகள் இந்தியாவில் அண்மைக்காலமாக பெருமளவில் அதிகரித்து வருகின்றன. இது குறித்து ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த எச்சரிக்கை செய்தி குறிப்பில், ``நிறுவனங்களின் நிதித்துறை அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்கள் குறிவைக்கப்படுகின்றனர். மின்னஞ்சல், வாட்ஸ்அப், மைக்ரோசாப்ட் டீம்ஸ் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் போலி கணக்குகள் உருவாக்கப்படுகின்றன.
மோசடி செய்பவர்கள் நிறுவனத்தின் CEO அல்லது மூத்த அதிகாரி போல நடித்து ஊழியர்களைத் தொடர்பு கொள்கின்றனர். அவசரத் தேவை என்று கூறி, தங்களது போலி வங்கி கணக்குகளுக்குப் பணத்தை உடனடியாக மாற்றுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிடுகின்றனர். இந்த மோசடியில் மற்றொரு ஆபத்தான தொழில்நுட்ப முறையும் பயன்படுத்தப்படுகிறது. ஊழியர்களுக்குத் தீங்கிழைக்கும் 'மால்வேர்' கோப்புகள் அனுப்பப்படுகின்றன. ஊழியர்கள் இந்த கோப்புகளைத் திறக்கும்போது, அவர்களின் கணினி அல்லது மொபைல் சாதனங்கள் முடக்கப்படுகின்றன. இதன் மூலம் ஊழியர்களின் 'வாட்ஸ்அப் வெப்' கணக்குகளை மோசடி செய்பவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்.
நிதித்துறை அதிகாரியின் வாட்ஸ்அப் கணக்கை முடக்கிய பிறகு, அந்த அதிகாரியின் பெயரிலேயே கணக்குத் பிரிவில் உள்ள மற்ற ஊழியர்களைத் தொடர்பு கொண்டு போலி கணக்குகளுக்குப் பணத்தை அனுப்ப உத்தரவிடுகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சமூக ஊடகங்கள் அல்லது குறுஞ்செய்திகள் மூலமாக வரும் உத்தரவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, எந்தவொரு நிதிப் பரிவர்த்தனையையும் அல்லது பணப் பரிமாற்றத்தையும் ஊழியர்கள் செய்யக் கூடாது. நிறுவனங்கள் இது குறித்து தங்கள் ஊழியர்களுக்குத் தெளிவான விழிப்புணர்வையும் அறிவுறுத்தல்களையும் வழங்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.




















