'இதனால்தான் எல்லோரையும் அழைத்து தவெக அமைச்சர் பதவி கொடுக்கிறது' - பிரேமலதா சொல்வ...
'இதனால்தான் எல்லோரையும் அழைத்து தவெக அமைச்சர் பதவி கொடுக்கிறது' - பிரேமலதா சொல்வது என்ன?
காங்கிரஸ் ஏற்கெனவே த.வெ.க அமைச்சரவையில் இடம் பெற்ற நிலையில் விசிக, ஐயூஎம்எல் போன்ற கட்சிகளுக்கு அமைச்சரவையில் இணைய த.வெ.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் ஐயூஎம்எல் கட்சி தாங்கள் அமைச்சரவையில் இடம்பெறுவதை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துவிட்டது. திருமாவளவனின் விசிக கட்சியும் த.வெ.க அமைச்சரவையில் இடம்பெறப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதாவிடம் த.வெ.க அமைச்சரவையில் இடம் கொடுப்பது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதில் அளித்த அவர், "தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் அதை தேமுதிக வரவேற்கும் என்றுதான் நான் சொல்லியிருந்தேன்.
அந்த வகையில் தமிழகத்தில் மாற்றம் வந்திருக்கிறது. ஆனால் அது ஆக்கப்பூர்வமான மாற்றமாக இருக்க வேண்டும்.
த.வெ.க பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருப்பதால் எல்லோரையும் அழைத்து இன்றைக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள்.
குதிரை பேரத்திற்கு வழி வகுத்துவிடக் கூடாது. அதைத்தான் தேமுதிக வலியுறுத்தி சொல்கிறது.
பெரும்பான்மையோடு வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுக்கோ அல்லது ஆதரவு கட்சிகளுக்கோ விஜய் அமைச்சர் பதவி கொடுத்தால் அதை நாம் வரவேற்கலாம்.

ஆனால் இன்று ஆதரவு அளித்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்ததைத் தவறான முன்னுதாரணமாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். நேர்மையான நல்லாட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.












