``அனுதாப நாடகமா? நான் எளிமையானவன்; ஆனா ஏழை அல்ல.!" - செருப்பு அணியாத தவெக MLA சொ...
கோவையில் பாஜக மையக்குழு கூட்டம்: வானதி பகிர்ந்த `மெலோடி' ; அண்ணாமலை ஆதரவு போஸ்டர்களால் சலசலப்பு!
கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாநில அணி தலைவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
பா.ஜ.க தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, கரு.நாகராஜ், மாநில செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி, அனைத்து பிரிவு அமைப்பாளர் கே.டி.ராகவன், மாநில பொதுபொது செயலாளர் ராமசீனிவாசன், சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் வேலூர் இப்ராகிம், நடிகை கஸ்தூரி, செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், ஊட்டி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன், முன்னாள் எம்.எல்.ஏ காந்தி உட்பட 80 க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்தும், தோல்விக்கான காரணங்கள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு மெலோடி சாக்லேட் பரிசாக கொடுத்திருத்த நிலையில், கோவையில் மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்த வானதி சீனிவாசன், பா.ஜ.க தொண்டர்களுக்கு மெலோடி சாக்லேட்டை பகிர்ந்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.
அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருக்கும் பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் கூட்டம் நடைபெறும் நாளில் நகரின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள், அவரது புகைப்படத்துடன் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
‘Fearless minds have no limits’ அதாவது, பயமறியாதவர்களுக்கு எல்லையே கிடையாது என்கிற வாசகத்துடன் அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ‘Army of Dheeran Annamalai’ என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் பா.ஜக-வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












