அமெரிக்க - இரான் ஒப்பந்தம் : தனித்து விடப்படுகிறதா இஸ்ரேல்? | மணிவண்ணன் திருமலை
`உத்தவ் கட்சி நிர்வாகிகள் எங்கள் கட்சியில் சேர காத்திருக்கிறார்கள்!' - ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த 6 எம்.பி.க்கள் திடீரென துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிற்கு கடிதமும் கொடுத்துள்ளனர்.
இது உத்தவ் தாக்கரே தலைமைக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. சிவசேனாவின் தொடக்க தினத்தையொட்டி உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தனித்தனியாக மும்பையில் பொதுக்கூட்டங்களை நடத்தினர்.
ஏக்நாத் ஷிண்டே கோரேகாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், ''நாங்கள் 'நான்' என்பதைப் பற்றி அல்ல, 'நாம்' என்பதைப் பற்றியே சிந்திக்கிறோம். தங்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள், சூழ்நிலை மாறிவிட்டது என்பதை உணர வேண்டும்.

எங்களது கட்சியில் சேர காத்திருக்கிறார்கள். எனது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீகாந்த் ஷிண்டே, மத்திய அமைச்சரவை பதவி உள்ளிட்ட முக்கிய பதவிகளை ஏற்க மறுத்துவிட்டார். அமைச்சரவை பதவியை ஒரு கட்சித் தொண்டருக்கு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். அதன்படியே அப்பதவி பிரதாப்ராவ் ஜாதவுக்கு வழங்கப்பட்டது.
எங்கள் கட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் மகன்களுக்குப் பதவிகள் வழங்கப்படுவதில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் முன்னின்று நடத்திய சிவசேனா அணி ஒரு பெரும் வெற்றியாக அமைந்துள்ளது. மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். என்னுடன் இணைந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வெற்றிபெறாவிட்டால் அரசியலை விட்டு விலகுவதாக நான் கூறியிருந்தேன். 40 எம்.எல்.ஏ.க்களாக இருந்த நாங்கள் இப்போது 60 பேராக உயர்ந்துள்ளோம்.
சிவசேனா (உத்தவ்) அதிகாரத்தைப் பெறுவதற்காக அதன் முக்கிய இந்துத்துவா கொள்கையை கைவிட்டது. சிவசேனா ஒரு காவி புயல். நாற்காலிக்காக காவியை மறந்துவிட்டார்கள். சாகேபை விமர்சித்தவர்களுடன் அவர்கள் கூட்டணி வைத்துள்ளனர். இதை ஒரு வாரிசால் செய்ய முடியுமா?. பல்வேறு மாநிலங்களில் பாஜகவை எதிர்த்து காங்கிரஸை ஆதரித்தவர்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
இதில் சிவசேனா (உத்தவ்), திமுக, ஆர்ஜேடி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் அடங்குவர். நாங்கள் வெற்றி பெறமாட்டோம், உங்களையும் வெற்றி பெற விடமாட்டோம் என்பதே காங்கிரஸின் மந்திரமாக உள்ளது. மகாராஷ்டிராவில் நடந்து முடிந்துள்ள 11 சட்டமேலவை தேர்தலிலும் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும்'' என்றார்.
சிவசேனா(உத்தவ்) கட்சி சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசுகையில், ''எனது தந்தை ஆரம்பித்த சிவசேனாவை விட நான் ஒன்றும் பெரிதல்ல. எனக்குத் தலைமைப் பதவியின் மீது எந்த ஆசையும் இல்லை. என் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால், சிவசேனா தலைவர் பதவியிலிருந்து விலகவும் நான் தயார். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், இந்த உன்னதமான சிவசேனாவை கொள்ளையர்களிடமோ அல்லது துரோகிகளிடமோ ஒப்படைக்கக் கூடாது.
மற்றபடி, நான் எதைக் கண்டும் கலங்கவோ அல்லது சோர்ந்து போகவோ மாட்டேன். ஒரு மலையைப் போல உறுதியாக நின்று எனது கடமைகளை நிறைவேற்றுவேன்," என்று அவர் கூறினார்.
சிவசேனா (உத்தவ்) கட்சியானது காங்கிரஸுடன் இணைந்துவிடும் என்று அதிருப்தி எம்.பி.க்கள் கொண்டிருந்த அச்சத்திற்குத் உத்தவ் தாக்கரே பதில் கொடுத்திருந்தார்.
"நாங்கள் 30 ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதே அவர்களுடன் இணையாத நிலையில், இப்போது காங்கிரஸுடன் எப்படி இணைவோம்? எனவே, இவ்வாறு கூறுபவர்கள் பொய் சொல்கிறார்கள்.

ஷிண்டேவின் சிவசேனா கட்சியுடன் பாஜக இணையக்கூடிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. சிவசேனா பிறந்தது மற்ற கட்சிகளுடன் இணைவதற்காக அல்ல. மாறாக, மராத்தி மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்காகவும், இந்துத்துவாவிற்காகவும் அது உருவானது. காங்கிரஸும் எங்களை ஒடுக்கியுள்ளது. எங்கள் வாழ்நாளில் பாதிக்கும் மேற்பட்ட காலம் காங்கிரஸுடனான பகையிலேயே கழிந்துள்ளது. எங்களுக்கு அவர்களுடன் கடும் பகை இருந்தது.
நாங்கள் நம்பிக்கையை இழந்துவிடுவோம் என்று சிலர் நினைக்கலாம்; ஆனால் நாங்கள் ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டோம். சிலர் எங்களுக்கு உத்தரவிடுமாறு கூறுகிறார்கள். ஆனால் பாலாசாகேப் ஏற்கனவே அதற்கான உத்தரவை (எங்களுக்குத் துரோகம் இழைப்பவர்களைப் புதைத்துவிடுங்கள் என்று) பிறப்பித்துவிட்டார். தேர்தல் முடிவுகளைக் கொண்டு மட்டுமே எங்கள் வெற்றியை மதிப்பிடக்கூடாது. வாக்காளர்கள் எங்களுக்கு வாக்களித்திருந்தும் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகிச் சென்றுவிட்டதால், இன்று நான் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்," என்று அவர் கூறினார்.















