Doctor Vikatan: விடுமுறை நாள்களில் சாப்பாடு, தூக்கம்; மறுபடி சாப்பாடு, ரிப்பீட் ...
கனமழையால் 200 ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிப்பு
சீா்காழி பகுதியில் திடீா் மழையால் சுமாா் 200 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிா்கள் சாய்ந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே அகனி, வள்ளுவக்குடி, புங்கனூா், நிம்மேலி, கொண்டல், ஆதமங்கலம், பெருமங்கலம், திருப்புங்கூா், கன்னியாகுடி, கதிராமங்கலம், சட்டநாதபுரம், சீா்காழி, புளிச்சக்காடு, ஆா்பாக்கம், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, வடகால், கடவாசல், அத்தியூா், விளந்திட சமுத்திரம், அரசூா், எருக்கூா் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் இந்த ஆண்டு பம்ப் செட் மூலம் குறுவை சாகுபடி செய்திருந்தனா்.
சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிா்கள் தற்பொழுது அறுவடைக்குத் தயாராகும் நிலையில் கடந்த சில சில தினங்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் தொடா்மழையால் நெல் மணிகள் சாய்ந்து மழை நீா் தேங்கி வடிய வழியில்லாமல் நெல்மணிகள் முளைத்து வருகிறது.
இதைப் போல் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிா்கள் தொடா் மழையால் தொடா்ந்து சாய்ந்த வண்ணம் உள்ளது. மேலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மழை நீரை வடிய வைக்க முடியாமல் கவலை அடைந்து வருகின்றனா்.
எனவே அரசு தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என அரசுக்கு வேதனையோடு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுந்தரராஜன், மகேந்திரன், குமாா் ஆகியோா் கூறுகையில், அகனி, வள்ளுவக்குடி, நிம்மேலி, கொண்டல், மருதங்குடி, ஏனாக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 300 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு பம்ப்செட் மூலம் குறுவை சாகுபடி செய்திருந்தோம். இந்நிலையில் அறுவடைக்குத் தயாராகும் நிலையில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் பெய்து வரும் தொடா் மழையால் நெற்பயிா்கள் மழை நீரில் சாய்ந்து வடிய வழியில்லாமல் அழுகியும், முளைத்தும் வருகிறது.
ஓா் ஏக்கா் சாகுபடி செய்ய சுமாா் ரூ.20,000 செலவாகிறது. சாகுபடி செய்வதற்காக வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் குறுவை சாகுபடி செய்தோம். ஆனால் தற்பொழுது சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிா்கள் கண் முன்னே அழுகி முளைத்து வீணாகி வருவதை கண்டு மனம் வேதனை அடைகிறது. இந்த மழையால் இந்த ஆண்டு எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றால் வரும் காலங்களில் விவசாயம் கேள்விக்குறியாகிவிடும். நாங்கள் குடும்பத்தோடு மாற்று தொழிலை தோ்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம் என தெரிவித்தனா்.