கிருஷ்ணகிரி தம்பதிக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு - சென்னையைச் சேர்ந்த பெற்றோர் ...
`கலை என்பது வியாபாரமல்ல.!’ - பத்மஸ்ரீ விருது பெற்ற புதுச்சேரி சிலம்பக் கலைஞர் பழனிவேல்
சிலம்பமே சுவாசம்!
ஒரு சாமானிய கிராமத்து இளைஞன், தன் பாரம்பர்யக் கலையை உயிர்ப்பிக்க நடத்திய 32 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு இன்று தேசமே எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறது.
1983-ஆம் ஆண்டு, ஒரு விளையாட்டாக சிலம்பம் பழகத் தொடங்கிய பழனிவேலுக்கு, அதுவே வாழ்நாள் சுவாசமாக மாறும் என்று அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கலையின் மீது கொண்ட தீராத காதலால், வெறும் பயிற்சியாளராக மட்டும் நின்றுவிடாமல், இக்கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஆசானாக உருவெடுத்தார்.

உலக மேடைகளில் சுழன்ற சிலம்பம்
இந்திய எல்லைகளைத் தாண்டி, துபாய் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் பழனிவேலின் சிலம்பக் கம்புகள் சுழன்றுள்ளன. அங்கு நடந்த சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றதுடன், வெளிநாட்டவர்களுக்கும் நம் மண்ணின் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொடுத்து அசத்தியவர் இவர்.
சர்வதேச மற்றும் தேசிய அளவில் பல வெற்றிகளைக் குவித்துள்ள இவருக்கு, 2004-இல் சிறந்த இளைஞருக்கான விருதும், 2012-இல் புதுச்சேரி அரசின் 'கலைமாமணி' விருதும் தேடி வந்தன. கடந்த 2023-ஆம் ஆண்டு மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதையும் வென்று சாதனை படைத்தார்.
இலவசப் பயிற்சியும்... 3,000 மாணவர்களும்!
`கலை என்பது வியாபாரம் அல்ல' என்பதை உரக்கச் சொல்லும் பழனிவேல், `மாமல்லன் சிலம்பம் மற்றும் நாட்டுப்புறக் கலை வளர்ச்சி கழகம்' என்ற கல்விச்சாலையை நிறுவி, கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறார்.
இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவரிடம் வித்தை கற்றுத் தேர்ந்துள்ளனர். இதுகுறித்துப் பேசும் பழனிவேல், ``இந்த விருதை சிலம்பக் கலைக்கு கிடைத்திருக்கும் கௌரவமாக நினைக்கிறேன். அதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

`பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும்...’
கிராமப்புற கலை மற்றும் விளையாட்டுகளில் சிலம்பம் மிக முக்கியமானது. அதனை அழியாமல் வளர்த்து வருகிறோம். மாணவர்களின் ஆதரவு இல்லாமல் அது சாத்தியமாகாது. இந்த நாட்டுப்புறக் கலைகளை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டுமானால், பள்ளிகளில் அதனை கட்டாயப் பாடமாக்க வேண்டும்" என்றார்.
"நம் பாரம்பரியக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதே எனது லட்சியம்" என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் இந்தச் சிலம்ப நாயகன். 32 ஆண்டுகால அர்ப்பணிப்புக்குக் கிடைத்துள்ள இந்த 'பத்மஸ்ரீ' விருது, புதுச்சேரி மண்ணிற்குப் பெருமை சேர்த்துள்ளது.















