OPS : `நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியா?'- தேனியில் பன்னீர்செல...
`திமுக அரசின் கீழ் சென்னை பாதுகாப்பானதா?' - ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை; வலுக்கும் கண்டனங்கள்
சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் பீகார் மாநில இளைஞர் கவுரவ் குமார், அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மதுபோதையில் வெறிபிடித்த கும்பல் ஒன்று கவுரின் மனைவியை வன்கொடுமை செய்து கொன்றிருப்பதும், அதை தடுக்க வந்த கணவரை கொலை செய்திருப்பதும், அதனைத் தொடர்ந்து அவர்களது 2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்றிருப்பதும் பெரும் அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தச் சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில்....
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " சென்னை தரமணியில் பீகார் மாநில இளைஞரும் அவரது குடும்பமும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சில நாட்களுக்கு முன்பு தான் திருத்தணியில் மகாராஷ்டிரா மாநில இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பேரலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழ்நாட்டில் ஒரு வடமாநில குடும்பம் மொத்தமாக கொல்லப்பட்டிருப்பது,"வந்தாரை வாழ வைக்கும்" தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
பொம்மை முதல்வர் என்ன சொல்லப்போகிறார்?
மனித குலத்திற்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றுள்ள இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வன்மையாக கண்டிப்பதுடன், யாருக்கும் பாதுகாப்பற்ற, மோசமான ஆட்சியை நடத்தி வரும் விடியா திமுக அரசிற்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கும் வெளி மாநிலத்தவருக்கும் பாதுகாப்பு கேடயமாக திமுக அரசு திகழ்வதை போல் வாய்ச்சவடால் பேசும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கொலைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்" என்று திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

திமுக அரசின் கீழ் சென்னை பாதுகாப்பானதா?
இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பதிவில், " சென்னையின் மையப்பகுதியில் இதுபோன்ற ஒரு கொடூரமான குற்றம் நிகழ்ந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஊழல் நிறைந்த திமுக அரசில் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பி உள்ளது. திமுக அரசின் கீழ் சென்னை பாதுகாப்பானதா?
ஊழல் நிறைந்த திமுக அரசின் கீழ் சட்டம் ஒழுங்கு இல்லை என்பதின் கொடூர பிரதிபலிப்பாக இந்த சம்பவம் நிற்கிறது. மாநில தலைநகரில் கூட உயிர் மற்றும் பாதுகாப்புக்கான அடிப்படை உரிமை செல்லரித்துவிட்டதாகத் தெரிகிறது" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
காவல்துறை என்ற ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறதா?
இந்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டிருக்கும் பதிவில், " தலைநகரிலேயே நடைபெற்றுள்ள இக்கொடூர நிகழ்வு காவல்துறை என்ற ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறதா? இயங்குகிறதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது. நாள் தவறாமல் நடைபெறும் படுகொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சியா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
5 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டில் பட்டப்பகலில் கூட மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத கொடுமையான சூழல் நிலவுவது, திமுக ஆட்சியில் எந்த அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத, உலகமே வியக்கும் திராவிட மாடல் ஆட்சியா? இதுதான் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மிகச்சிறப்பான ஆட்சியா? வெட்கக்கேடு!

வருமானம்தான் திமுக அரசிற்கு முக்கியமானதா?
இக்கொடூர கொலைக் குற்றத்தில் ஈடுபட்டதாகத் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வடமாநிலத்தவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்துள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் கையாலாகாத்தனமே நடைபெற்றுள்ள கொடூர குற்றத்திற்கு மூல காரணமாகும்.
அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படை காரணமாக உள்ள மதுக்கடைகளை மூடுவதில் திமுக அரசிற்கு இன்னும் என்ன தயக்கம்? நாட்டு மக்களின் பாதுகாப்பான நல்வாழ்வினை விடவும் அரசின் வருமானம்தான் திமுக அரசிற்கு முக்கியமானதா? ஈவு இரக்கமின்றிக் கொலை செய்யப்பட்ட தம்பி கௌரவ் குமாரின் 2 வயது குழந்தையின் உடல் குப்பைமேட்டில் கண்டெடுக்கப்பட்ட கொடுமை நெஞ்சை உலுக்குகிறது.
உள்நுழைவுச் சீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்!
தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் பதிவு செய்யும் உள்நுழைவுச் சீட்டு முறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நெடுங்காலமாக நாம் தமிழர் கட்சி போராடி வரும் கோரிக்கையானது, தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு மட்டுமானதல்ல.
வேலை தேடி வரும் வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பான நல்வாழ்வினை உறுதி செய்வதற்கும் உள்நுழைவுச் சீட்டு மிகமிக இன்றியமையாததாகும்.

தண்டனை பெற்றுத்தர வேண்டும்...
ஒன்றிய, மாநில அரசுகள் உள்நுழைவுச் சீட்டு முறையை முழுமையாக நடைமுறைப்படுத்தி இருந்தால் தற்போது அடையாறில் கொலையுண்டவர்கள் மற்றும் குற்றத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் குறித்த தகவல்களைத் தேடி அலைந்த அவலநிலை தமிழ்நாடு காவல்துறைக்கு ஏற்பட்டிருக்காது.
சென்னையில் பீகார் இளைஞர் தம்பி கௌரவ் குமார் குடும்பத்தோடு கொலை செய்யப்பட்ட கொடூர குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு சட்டத்தின் மூலம் கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்."

















