'ரூ.20 லட்சம் வருமானம்; பெற்றோர் ஐஏஎஸ்... பிள்ளைகளுக்கு ஏன் இட ஒதுக்கீடு?' - உச்...
காவல் நிலைய பெண் ஊழியருக்கு நேர்ந்த பாலியல் கொடுமை; விஷம் குடித்த குற்றவாளி - கிருஷ்ணகிரி பரபரப்பு!
காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் உதவியாளராக பணியாற்றும் பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையில் பணி செய்த கணவர் சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் மரணமடைந்ததால், கருணை அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் மனைவிக்கு கம்ப்யூட்டர் உதவியாளராக பணி கிடைத்தது.
ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய அப்பெண் அருகிலுள்ள கிராமத்தில் பார்வைத்திறன் இல்லாத தாயுடன் தன் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
கடந்த 16 ஆம் தேதி பணி முடிந்து ஓசூரிலிருந்து பேருந்தில் வந்து தன் கிராமத்தில் இறஙகியவர், இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக டிராவல் வேனில் வந்த மூர்த்தி என்பவர், 'வீட்டில் இறக்கி விடுகிறேன், வேனில் ஏறவும்' என்று அழைத்ததால், ஊர்காரர் என்ற நம்பிக்கையில் அப்பெண் ஏறியுள்ளார்.
ஆனால், டிரைவர் மூர்த்தி வாகனத்தை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தி அப்பெண்ணை கடுமையாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ரத்தப்போக்குடன் வாகனத்திலிருந்து குதித்து தப்பித்த பெண், வீட்டிற்கு வந்து தன் தாயாரிடம் நடந்ததைச் சொல்லி அழுதுள்ளார். அதைத் தொடர்ந்து பாகலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

வழக்கு பதிவு செய்த பாகலூர் காவல்துறையினர், தலைமறைவான மூர்த்தியை தேடி வந்த நிலையில், காவல் நிலையம் வந்த மூர்த்தி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே காவல்துறையினர் அவரை மீட்டு ஓசூர் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார் மூர்த்தி.


















