"அமெரிக்காவுடன் நடப்பது பேச்சுவார்த்தை அல்ல; 'செய்தி பரிமாற்றம்'" - ஈரான் அமைச்ச...
குடிநீர்க் குழாய் சரிசெய்ய சென்றவர் புலிக்கு இரையான சோகம்; கை, கால்கள் தனித்தனியாக கிடந்த அதிர்ச்சி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள ஓவேலி லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி பாலகிருஷ்ணன். வீட்டின் அருகில் உள்ள குடிநீர்க் குழாயில் தண்ணீர் வராத காரணத்தால் அதனைச் சீரமைப்பதற்காக தனியார் காபி தோட்டத்தை ஒட்டிய பகுதிக்கு நேற்று மாலை சென்றிருக்கிறார்.
நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து இன்று காலை வரை தேடி வந்த நிலையில், அருகில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியில் பாலகிருஷ்ணனின் கால், கை என உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் தனித்தனியாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதைக் கண்டுப் பதறிய மக்கள், அவரை புலி தாக்கிக் கொன்றுதடன், அவரின் உடல் பாகங்களையும் புலி தின்றிருப்பதையும் உறுதி செய்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், வனத்துறையின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உடலை உறவினர்களுக்குக் காட்டாமல், அவசர அவசரமாக அனுப்பி வைத்ததாக உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மனித- வனவிலங்கு மோதலைத் தடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், புலியைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது போலீஸாரும் வனத்துறை அதிகாரிகளும் மக்களைச் சமாதானப்படுத்தி அப்பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் கூண்டுகள் அமைத்து புலியைப் பிடிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





















