BB Tamil 9: நாமினேஷன் லிஸ்டில் 13 பேர்! இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர்?
கேரளா: திருமண நாளில் மணமகளுக்கு விபத்து; மருத்துவமனையில் வைத்து தாலி கட்டிய இளைஞர்!
கேரள மாநிலம் ஆலப்புழா தும்போளியைச் சேர்ந்த மனுமோன்- ரஷ்மி தம்பதியின் மகன் ஷரோன். சேர்த்தலா கே.வி.எம் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக உள்ளார், ஷாரோன். இவருக்கும் கொம்மாடி முத்தலச்சேரியைச் சேர்ந்த ஜெகதீஷ் - ஜோதி தம்பதியரின் மகள் ஆவணி-க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆவணி சேர்த்தலா பிஷப்மூர் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களது திருமணம் நேற்று முன்தினம் நடப்பதாக முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்காக அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு, ஆலப்புழா சக்தி திருமண மண்டபத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. நேற்று முன்தினம் மதியம் 12.15 மணி முதல் 12.30 மணிகுள் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தன. திருமண நாளன்று மணமகள் மேக்கப் போடுவதற்காக அதிகாலை தனது உறவினர்களான அனந்து, ஜைனம்மா ஆகியோருடன் காரில் குமரகம் நோக்கி புறப்பட்டார்.

சேர்த்தலா குமரகம் சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது பள்ளிச்சிறை சூழப்பாலம் அருகே வைத்து இவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து மரத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த அனைவரும் காயமடைந்தனர். மணமகள் ஆவணி-யின் கை உடைந்ததுடன் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அப்பகுதியினர் மீட்டு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்தனர். ஆவணியின் முதுகில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்

அதே சமயம் அன்று காலையில் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மண்டபத்தில் உறவினர்கள் கூடினார்கள். இதை அடுத்து நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் திருமணம் செய்வது என மணமகன் ஷாரோன் முடிவுசெய்தார் அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் வைத்து டாக்டர்கள் முன்னிலையில் ஆவணிக்கு தாலி கட்டினார் மணமகன் ஷாரோன். ஆவணிக்கு இப்போது அன்பும், ஆதரவும் தேவை என்பதால் அவருக்கு தாலி கட்டியதாக ஷாரோன் தெரிவித்தார். மேலும், ஆலப்புழாவில் திருமண மண்டபத்தில் வந்திருந்த அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.
















