`தி.மு.கவுக்கு தாவுகிறாரா கே.டி ராஜேந்திர பாலாஜி?' - பரபரக்கும் விருதுநகர் அரசிய...
கோவை: வீடு புகுந்து வாலிபர் படுகொலை; கொலை செய்வதை வீடியோ பதிவு செய்த கொடூரம்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சுலபம்பாளையம் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (22). இவர் நேற்றிரவு தனது நண்பர் விஷ்ணு (19) என்பவருடன் மது குடித்துள்ளார்.
பின்னர் இருவரும் சிக்கலாம்பாளையம் பகுதியில் உள்ள விஷ்ணுவின் வீட்டிற்குப் போதையில் சென்றுள்ளனர். பின்னர் வீட்டைப் பூட்டாமல் இருவரும் உறங்கியுள்ளனர். இந்த நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவர் வீட்டிற்குள் நுழைந்து அஸ்வினை கழுத்தை அறுத்தி கொலை செய்துள்ளனர்.
பின்னர் சுத்தியால் அவரது உடலைப் பலமாகத் தாக்கியுள்ளனர். இந்தக் காட்சிகளை கொலையாளிகள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.
பின்னர் ரத்தம் வடியும் கத்தியை தங்களது வாயில் வைத்தபடி செல்ஃபியும் எடுத்துள்ளனர். இவற்றை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு காவல் துறையினர் அஸ்வின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாகக் கொலை நடந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய இருவரையும் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


















