காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில்: போரை நிறுத்திய பொக்கிஷம்; இந்த ஈசனை சுற்றி வந்தா...
சுசீந்திரம் தேர்த்திருவிழா: "அமைச்சர் காலதாமதமாக வந்ததுதான் பிரச்னைக்குக் காரணம்" - தளவாய் சுந்தரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவில் பக்தர்கள் தரப்பில் சில கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது தேர்வடம் இழுக்கச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆவேசமாகி சில வார்த்தைகளைப் பேசியது சர்ச்சையானது.
பா.ஜ.க அமைப்பினர்தான் அப்படி கோஷம் போட்டதாக தி.மு.க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு தாமதமாக வந்ததுதான் பிரச்னைக்குக் காரணம் என அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தெரிவிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அனைத்துக் கோயில்களிலும் நடைபெறுகின்ற திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், தேரோட்ட நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்தும் மக்களின் பங்களிப்பு மூலம்தான் நடைபெற்று வருகின்றன. இது அமைச்சருக்குத் தெரியுமா, அல்லது மறந்து விட்டாரா?

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவிலில் பத்து நாட்கள் மார்கழி திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தேரோட்ட நிகழ்வு நடைபெற்றது.
சுவாமிக்குக் குறித்த நேரத்தில் பூஜைகள் நடத்தப்பட்டு தேர்த்திருவிழா தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அமைச்சர் காலதாமதமாக வந்ததன் காரணமாகத் தேரோட்ட நிகழ்வு தொடங்குவது காலதாமதமானது.
இது தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களின் மனதையும் புண்படச்செய்துள்ளது. இந்தக் காலதாமதத்தை அமைச்சர் தவிர்த்து இருக்க வேண்டும். மேலும் திருவிழா காலங்களில் பக்தர்கள் அந்தந்தத் தெய்வங்களை நினைத்துப் பக்திக் கோஷங்கள் போடுவது எல்லா திருக்கோவில்களிலும் நடைமுறையில் இருந்து வருகிறது.
அது போன்றுதான் சுசீந்திரத்திலும் தேரோட்ட நிகழ்வில் பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இந்நிலையில் காலதாமதமாக வந்த அமைச்சர் பக்தர்கள் எழுப்பிய கோஷத்தைப் பொறுக்க முடியாமல் பக்தர்களைத் தகாத வார்த்தையால் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

சுசீந்திரம் தெப்பக்குளத்தின் ஒரு பகுதியானது இடிந்து விழுந்த நிலையில் இதுவரை சரிசெய்யப்படாமல் இருப்பது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பல குளங்களுக்குத் தூர் வாருவதற்காக நிதிகள் ஒதுக்கியும் இதுவரை வேலை நடைபெறவில்லை. சுசீந்திரம் கோயில் 10 நாள் திருவிழாவிற்கு அரசு மூலம் ஒதுக்கிய தொகை வெறும் இரண்டு லட்சம் ரூபாய்தான். ஆனால் பக்தர்களின் பங்களிப்பு 20 லட்சம் ரூபாய் ஆகும்.
மக்களின் பங்களிப்பு மூலம் செயல்படுகின்ற ஒரே துறை இந்து சமய அறநிலையத்துறை மட்டும்தான். இதனை அமைச்சர் உணர்ந்து செயல்பட வேண்டும். இந்நிலையில் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழாவில் பக்தர்களின் மனம் புண்படும்படி அமைச்சர் நடந்து கொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்" என்றார்.















