BB Tamil 9: "தப்பு பண்ணிட்டேன்.!"- சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்ட பாரு; காலில் வ...
`திமுக-வின் அடிமையாக இருக்கிறது தமிழக காங்கிரஸ்!' - தவெக நோக்கி கிளம்பிய சோனியாவின் தேர்தல் ஏஜென்ட்?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது.
வரும் மே மாதம் புதிய சட்டசபை அமைக்கப்பட வேண்டுமென்பதால் ஏப்ரல் மாதம் தேர்தல் இருக்கும்.
அதற்கான அறிவிப்பு, பிப்ரவரி முதல் வாரத்தல் வரலாமென எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தச் சூழலில் அரசியல் கட்சிகள் கூட்டணி, சீட் பேரம் என பரபரப்பாகத் தொடங்கி விட்டன.
தமிழகத்தில் தற்போது திமுக அதிமுக தவிர இந்த வருடம் தவெக தேர்தல் களம் காண்பதால் அந்தக் கட்சியுடன் எந்தக் கட்சிகள் கூட்டணிக்குச் செல்லும் என்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
’ஆட்சியில் பங்கு’ என்கிற ஒரு தூண்டிலை வீசிக் காத்திருக்கிறார் நடிகரும் தவெக தலைவருமான விஜய்.
இதுவரை அந்தக் கட்சியுடன் கூட்டணிக்கு எந்தப் பெரிய கட்சியும் செல்லவில்லை.
அதிமுகவுடன் முரண்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திமுகவுடன் முரண்பட்ட நாஞ்சில் சம்பத் போன்ற சில முக்கிய முகங்கள் அங்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் ஒரு சாரார், விஜய் கட்சிக்கு கூட்டணிக்கு செல்லலாம் என்கிற கருத்துகளைப் பேசி வருகின்றனர்.

ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி முதலில் இந்த விஷயத்தைக் கொளுத்திப் போட, தற்போது அவருக்கு ஆதரவாகவும் அவருக்கு எதிராகவும் கட்சிக்குள்ளேயே அறிக்கைகள் பறந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலிருந்து முதல் ஆளாக தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து பகிரங்கமாகவே கட்சிக்கு அறிவித்து விட்டு தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கட்சியின் சொத்து பாதுகாப்பு கமிட்டி உறுப்பினரும் முன்னாள் மாணவர் காங்கிரஸ் தலைவருமான சூர்யபிரகாசம்
அவரிடம் பேசினோம்.
‘’75ம் வருஷம் சென்னையின் மாணவர் காங்கிரஸ் தலைவரா இருந்தவன். இந்திரா காந்தி காலத்துல இருந்து இப்ப வரைக்கும் 45 வருஷத்துக்கும் மேல் கட்சிக்காகப் பாடுபட்டிருக்கேன். வழக்கறிஞர் பிரிவுத் தலைவரா நான் இருந்த காலத்துல கட்சி வழக்குகள் எல்லாவற்றிலும் ஆஜர் ஆகி வாதாடி இருக்கேன்.
இப்பவும் சொத்து பாதுகாப்பு குழுவில் உறுப்பினரா போட்டிருக்காங்கன்னா கட்சியில எவ்வளவு சீனியரா இருப்பேன்னு பார்த்துக்கோங்க.

ஆனா தேர்தல்னு வரும் போது என்னை மாதிரி களத்துடன் நேரடியா தொடர்புடைய ஆளுங்க கருத்தைக் காது கொடுத்துக் கேக்கவே மாட்டேங்குறாங்க.
இன்னைக்கு கள நிலவரம், ஆளுங்கட்சிக்கு சாதகமா இல்லை. எல்லா இடத்துலயும் ஆட்சிக்கு எதிரான மனநிலை இருக்கு. இதைச் சொன்னா கட்சியில புரிஞ்சுக்கல. மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கட்சியை திமுகவின் அடிமையாகவே வச்சிருக்கார். ஆளுங்கட்சிக்கு ஆதரவா இருந்தா கள நிலவரத்தை தேசிய தலைமைக்கு எப்படிச் சொல்வாங்க?

சில சோர்ஸ் மூலமா அகில இந்திய தலைமைக்கு விஷயத்தை எடுத்துட்டுப் போனேன். அது ஒர்க் அவுட் ஆகலை. அதனால வேற வழியில்லாமத்தான் ராஜினாமா செய்ய வேண்டியதாகிடுச்சு’’ என்றவர், இன்னொரு விஷயதையும் பகிர்ந்தார்.
‘கட்சியில அகில இந்திய தலைவர் தேர்தல் நடந்தப்ப தலைவர் பதவிக்கு சோனியா காந்தியும் எதிர்த்து சரத் பவாரும் போட்டியிட்டாங்க. அப்ப சோனியா காந்திக்கு தமிழ்நாட்டுல தேர்தல் ஏஜென்ட்டா இருந்தவன் நான்’ என்பதுதான் அது.

அடுத்து, தவெகவில் சேர்கிறீர்களா எனக் கேட்டதற்கு, அது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால் எனக்குத் தெரிய அந்தக் கட்சிக்கு ஆதரவு தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வருகிறது’ என்கிறார்.!



















