திருச்சி: சரித்திர பதிவேடு குற்றவாளி படுகொலை; அதிர வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள...
திருச்சி: சரித்திர பதிவேடு குற்றவாளி படுகொலை; அதிர வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பாரதியார் தெரு அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் மகபூப் பாட்ஷா. இவரது மகன் பாதுஷா என்கிற பாஷா (வயது: 24). பிரபல ரௌடியான இவரை, நேற்று நள்ளிரவு திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் செக் போஸ்ட் காமராஜர் நகர் வினோபாஜி தெரு பகுதியில் மர்ம நபர்கள் வெட்டி உள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே பாதுஷா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்று பாதுஷாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து பாதுஷா கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று மேற்கொண்டு வந்த விசாரணையில், பாதுஷா அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் திருமணம் மீறிய உறவில் இருந்ததாகவும், இதனால் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட மோதலில் பாதுஷாவின் வலது கையின் கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் துண்டானதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாதுஷா அந்த பெண்ணிடம் மீண்டும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால், கொலை நடந்திருக்குமோ என்று சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ரவுடி கோஷ்டியில் ஏற்பட்ட மோதலா என பல்வேறு கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்த சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















