"மதுரை வடக்கு காங்கிரஸுக்கு.. திருப்பி அடிக்கவும் தெரியும்!" - தளபதியை சீண்டும் ...
துரைமுருகன்: எம்.ஜி.ஆரின் 'செல்லப்பிள்ளை' கலைஞரை 'தலைவராக' ஏற்றுக்கொண்டது ஏன்? | Vote Vibes 06
தமிழ்நாட்டின் தற்போதைய நீர்வளத்துறை அமைச்சர், திமுகவின் பொதுச் செயலாளர், காட்பாடி தொகுதியின் எம்.எல்.ஏ, சீனியர் அரசியல்வாதி - இது 'துரைமுருகனின்' தற்போதைய பக்கங்கள்.
இவரது அரசியல் வரலாற்றை புரட்டி பார்த்தால், அது 1954-ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. இந்த ஆண்டும் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆரம்ப காலமும் கிட்டத்தட்ட ஒன்று.
தமிழ்நாட்டில் திமுக வளர வளர, இவரது அரசியல் பயணமும் தொடர்ந்து வளர்ந்தது என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இவர் திமுகவின் மிக முக்கியமான முகம்.
இது இப்போது இல்லை... அப்போதிலிருந்தே. துரைமுருகன் இருக்கும் வரையில் கட்சியின் முக்கிய முகமாகவே இருப்பார் என்றும் கூறலாம்.

1971-ம் ஆண்டு தொடங்கி 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரை, இவர் மொத்தம் 12 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். அதில் 1984, 1991 ஆண்டுகளில் நடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களைத் தவிர, மற்ற தேர்தல்களில் எல்லாம் இவருக்கு வெற்றி தான்.
தொடர்ந்து திமுகவின் முகமாக அறியப்படும் துரைமுருகன், எம்.ஜி.ஆரின் 'செல்லப்பிள்ளை' என்பது பெரும்பாலான 2கே கிட்ஸிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆம்... இவர் எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளை தான். ஆனால், எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டுமே, அதிமுக பக்கம் செல்லாமல் இப்போது வரை திமுகவிலேயே தொடர்ந்து இருந்து வருகிறார் துரைமுருகன்.
எம்.ஜி.ஆர் - துரைமுருகன் உறவு குறித்து துரைமுருகனே ஒரு பிராசார மேடையில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பகிர்வு இதோ...
"எம்.ஜி.ஆர் எனக்கு மிகவும் வேண்டியவர். என்னை ஏழு ஆண்டுகள் படிக்க வைத்தவர். பாம்பேவில் ஃபிளைட்டைத் தவறவிட்டதால், சார்ட்டர்ட் ஃபிளைட் பிடித்து என் திருமணத்திற்கு வந்தார். என் திருமணப் பரிசாக 25 பவுன் நகை கொடுத்தார். இப்படி எனக்கு எல்லாம் செய்தவர் தான் எம்.ஜி.ஆர்.
ஆனால், 'இடி, மின்னல், மழை' என்கிற பிராசார பயணத்தில், அவரை கடுமையாக சாடி பேசினேன்.
சபையில் அவரை எதிர்த்து பேசும்போது, அவர் கையைக் காட்டுவார். ஆனால், நான் முகத்தை திருப்பி கொள்வேன்.

ஒருநாள், எம்.ஜி.ஆரிடம் சபாநாயகர் அறையில் மாட்டிக்கொண்டேன். எம்.ஜி.ஆர் பண்ருட்டி ராமசந்திரனுடன் சபாநாயகரின் அறைக்கு வந்தார். அங்கே குறுக்கே நானும், ரகுமான் கானும் போய்க்கொண்டிருந்தோம்.
என் சட்டையைப் பிடித்து, 'உங்கிட்ட சில விஷயங்களைப் பேசணும்' என்று கூறினார். உடனே, நானும் 'பேசலாம்ண்ணே' என்றேன்.
அவரது அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். ஒருவரிடம் பேச வேண்டும் என்றால் முதலில் நெஞ்சை தடவுவது மாதிரி பேசத் தொடங்குவார். இது தான் எம்.ஜி.ஆரின் டேக்டிக்ஸ்.
'ஏன் துரைமுருகன், அப்பா இறந்துட்டாராமே. அதைக்கூட எனக்கு சொல்லல. ராமசந்திரன் அவ்வளவு கெட்டவனா போய்ட்டானா?' என்றார்.
என் அப்பாவை எம்.ஜி.ஆருக்கு நன்கு தெரியும். என் அப்பாவிடம் எம்.ஜி.ஆர், 'இனி அவன் உங்க மகன் இல்ல... என் மகன்' என்று கூறியிருக்கிறார். என்னுடைய காலேஜ் புரோகிரெஸ் கார்டில் எம்.ஜி.ஆர் தான் கையெழுத்து போடுவார். அந்தளவு பழக்கம்.
எம்.ஜி.ஆரின் கேள்விக்கு, "தேர்தலுக்கு 13 நாள்களுக்கு முன்ன தான் எங்க அப்பா இறந்தாரு. தேர்தல் அன்னைக்கு தான் காரியம் வெச்சுருந்தோம். ஆனால், இடையில நீங்க ரெண்டு தடவை என் தொகுதிக்கு வந்து எனக்கு ஓட்டு போட வேண்டாம்னு சொன்னீங்களே... அதுகப்புறம் நான் எப்படி உங்ககிட்ட பேசறது" என்று பதிலளித்தேன்.

அடுத்ததா, 'நான் என்ன சொன்னாலும் கேட்பீயா?'னு கேட்டார். 'கேட்பேனே' என்று சொன்னேன்.
'தவறமாட்டியா?' என்கிற கேள்விக்கு, 'தவறமாட்டேன்' என்று சொன்னேன்.
'இந்த ஜன்னல் வழியா ஏறி கீழே குதி பாக்கலாம்' என்று கூறினார். உடனே, ஜன்னல் பக்கம் போனதும், செக்யூரிட்டியைக் கூப்பிட்டு, 'குதிச்சாலும் குதிச்சுடுவான்' என்று தடுத்தார்.
பின், 'இன்னொன்னு சொல்றேன் கேட்கிறீயா? அது குதிப்பது அல்ல... உக்கறாது. நான் உக்காந்திருக்கேன்ல. அதுக்கு பக்கத்துல இருக்க சீட்ல போய் உக்காரு. நான் சபைக்கு வந்து உனக்கு என்ன மந்திரி பதவிங்கறதை அறிவிக்கிறேன்' என்றார்.
அதற்கு நான், 'என் உயிரையே வேணும்னாலும் கொடுப்பேனே தவிர, கட்சி மாறமாட்டேன்' என்று மறுத்துவிட்டேன்.
'என்ன சொல்ற? நான் இருக்கற இடத்துல தான நீ இருக்கணும்' என்ற கேள்விக்கு, "நீங்க கத்தி சண்டை போடறது பாத்து 'ஆஹா'னு கட்சிக்கு வந்துருந்தா, நான் உங்கக்கூட வந்துருப்பேன். ஆனா, நான் அப்படி வரல.

திராவிட நாடு கிடைக்கும்னு... அண்ணாவை நம்பி பெரிய இயக்கத்துக்கு போறோம்னு வந்தவன் துரைமுருகன். அதனால, என் கட்சி திமுக. என் தலைவர் கலைஞர்" என்பது என் பதில்.
கோபத்தின் உச்சத்தில், 'அப்போ நான்?' என்று கேட்டார். "எல்லா உதவியும் செஞ்சு படிக்க வெச்சவரு நீங்க. என்னை வாழ வைத்த தெய்வம் நீங்க. கலைஞர் என் தலைவர்" என்றேன்.
அதன் பின், என்னை அணைத்து, "நீ இவ்ளோ உறுதியா இருப்பேனு நான் நினைக்கலடா" என்று பாராட்டி அனுப்பி வைத்தார்.
அந்தளவு எனக்கு கட்சியும், கொள்கையும் முக்கியம்." என்றார்.
துரைமுருகன் தான் சொன்னதுபோலவே கொள்கைப்பிடிப்புடன் திமுக-வில் பயணித்து வருகிறார்.
தமிழ்நாடு அரசியலில் சீனியராக இருக்கும் துரைமுருகன், கருணாநிதி, ஸ்டாலின், தற்போது உதயநிதி ஸ்டாலின் என தலைமுறைகளைக் கண்டிருக்கும் திமுக-வின் வரலாற்றில் முக்கிய அங்கமாக இருக்கிறார்.














