தேனி: "எங்களின் தாகம் தீர்த்தவர் ஜான் பென்னிகுயிக்" - பொங்கல் வைத்து கொண்டாடும்...
தேனி: "எங்களின் தாகம் தீர்த்தவர் ஜான் பென்னிகுயிக்" - பொங்கல் வைத்து கொண்டாடும் ஊர் பொதுமக்கள்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து கடலில் வீணாக கலந்த நீரைத் தடுத்து, கிழக்கு பகுதிகளுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை ஜான் பென்னிகுயிக் முன்னெடுத்தார். அரசு நிதி போதிய அளவில் கிடைக்காத சூழலிலும், தனது சொத்துகளை விற்று, தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியார் அணை கட்டப்படுவதற்கு அவர் முக்கிய பங்காற்றினார்.
இந்த அணையின் மூலம் தேனி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் நீர்த் தேவைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.
ஜான் பென்னிகுயிக்கின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் தேனியில் உள்ள பாலார்பட்டி பொதுமக்கள் கடந்த 27 வருடங்களாக அவருக்கு பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த வருடமும் ஜான் பென்னி குயிக் பிறந்த தினத்தையொட்டி பாலார்பட்டியில் உள்க கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு அரங்கம் முன்பு, ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த மக்கள், நினைவு அரங்கம் முன்பு பொங்கல் வைத்தனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து பாலார்பட்டியை சேர்ந்த ஆண்டி கூறுகையில் ," வறட்சியாக இருந்த எங்கள் ஊருக்கு தண்ணீர் கொடுத்து செழிப்பாக மாற்றியவர் கர்னல் ஜான் பென்னி குயிக். அவர் மட்டும் இல்லை என்றால் நாங்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாக வேலை தேடி சென்றிருப்போம், அந்தளவிற்கு வறுமையாக இருந்தது எங்கள் ஊர். கர்னல் பென்னி குயிக் கட்டிய இந்த முல்லைப் பெரியாறு அணையினால் தான் எங்களுடைய தலைமுறையே சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு நன்றி கடனாகத்தான் ஒவ்வொரு வருடமும் அவர் பிறந்த நாளில் பொங்கல் வைத்து கொண்டாடி வருகிறோம்" என்றார்.



















