கட்சியை வளர்க்குறதைவிட கூட்டணிதான் முக்கியம்! - காங்கிரஸின் 50 ஆண்டு கூட்டணி சர்...
தேயிலை தோட்டத்தில் கிழிந்த உடைகள்; வனத்தில் உடல் பாகங்கள் - கோத்தகிரியை உறைய வைத்த பழங்குடி மரணம்!
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கூவக்கரை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான வெள்ளியங்கிரி. கூலித்தொழிலாளியான இவர் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். கடந்த மாதம் 29 - ம் தேதி கோத்தகிரி அருகில் உள்ள அரவேணு பகுதிக்கு கூலி வேலைக்குச் சென்ற இவர், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் வெள்ளியங்கிரியை கண்டுபிடிக்க முடியவில்லை. காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அரவேணு பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் அவரின் உடைகள் கிழிந்த நிலையில் கிடைப்பதைக் கண்டறிந்துள்ளனர். வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அருகில் இருந்த வனப்பகுதியில் வெள்ளியங்கிரியின் தலை, கை உள்ளிட்ட உடல் பாகங்கள் தனித்தனியாக கிடப்பதைக் கண்டறிந்துள்ளனர். அழுகிய நிலையில் காணப்பட்ட உடல் பாகங்களை மீட்டு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். எஞ்சிய உடல் பாகங்களை தேடும் பணியில் இரு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

பின்னணி குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரி ஒருவர், "வெள்ளியங்கிரியின் உடல் பாகங்கள் கிடந்த பகுதியில் சிறுத்தையின் கால் தடங்கள் காணப்பட்டுள்ளது. சிறுத்தை தாக்கியதில் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறோம். உடற்கூறாய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே உறுதியான முடிவுக்கு வர முடியும். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.
வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரின் உடல் பாகங்கள் வனப்பகுதியில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், கோத்தகிரியை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.


















