Seva Teerth: 'குடிமக்கள் இறைவனுக்கு சமம்' - புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்...
`நடைபாதையில் சென்ற பைக்; காலால் தடுத்து நிறுத்திய மூதாட்டி' - அவ்வை சண்முகி என புகழும் நெட்டிசன்கள்!
கேரளாவில் சாலை ஒன்றில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நெரிசலாக நின்றுகொண்டிருந்த நிலையில், நடைபாதையில் சில பைக்குகள் வேகமாக சென்றுகொண்டிருந்தன. அப்போது நடைபாதையில் மூதாட்டி ஒருவர் நடந்து வந்துகொண்டிருந்தார். எதிரில் வந்த ஆக்டிவா ஸ்கூட்டரை தடுத்து நிறுத்தினார். அவர் பக்கவாட்டில் செல்ல முயன்றபோது தனது காலால் ஸ்கூட்டரை தடுத்தார். பின்னர் தனது மொபைல் போனில் ஸ்கூட்டியை போட்டோ எடுக்க முயன்றார். உடனே ஸ்கூட்டியில் வந்த நபர் நடைபாதையில் இருந்து சாலையில் பயணித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த மூதாட்டி யார் என கேரளா முழுவதும் தேடினர். முடிவில் அவர் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிரபாவதி அம்மா என்பது தெரியவந்தது. கோழிக்கோடு எரஞ்சிப்பாலத்தில் பிரபாவதி அம்மா நடந்து சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் பிரபாவதி அம்மாவின் வீட்டுக்குச் சென்று அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றவர் வெங்கரி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்த நிலையில், அவருக்கு அபராதம் விதிப்பதுடன் ஒரு வாரம் பயிற்சி வழங்கப்படும் எனவும் மோட்டார் வாகனத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரபாவதி அம்மா கூறுகையில், "எனது வீடியோ வைரலாகும் என நான் நினைக்கவில்லை. ஆனாலும், அதன்மூலம் நல்ல தகவல் மக்களை சென்றடைந்தது மகிழ்ச்சி. ஸ்கூல் படிக்கும்போது நான் ஸ்கவுட் அண்ட் கைட்ஸ் ஆக இருந்தேன். அதனால் சாலை போக்குவரத்து விதிகளும், தனிமனித உரிமைகள் குறித்தும் எனக்கு நன்றாக தெரியும். சாலை ஓரத்தில் பைக் ஓட்டுபவர்களை நான் அவ்வப்போது தட்டிக்கேட்டு வருகிறேன். பேருந்தில் பயணிக்கும்போதே பெண்கள் இருக்கையில் ஆண்கள் அமர்ந்தால் வாக்குவாதம் செய்து உரிமைகளை நிலைநாட்டி உள்ளேன். நான் நடைபாதையில் செல்லும்போது எதிரே அந்த ஸ்கூட்டர் வந்தது. நான் அவரை தடுத்து நிறுத்தி திரும்பி போகும்படி கூறினேன். அதற்கு அவர், 'இதோ சிறிது இடம் இருக்கிறதே அதன் வழியாக ஸ்கூட்டரை வளைத்து கொண்டு செல்கிறேன்' என இடைவெளியில் செல்ல முயன்றார். அப்போதுதான் நான் கால்களால் தடுத்து நிறுத்தினேன்.

'என்னிடம் சட்டம் பேசுகிறீர்களா?' என அவர் கேட்டார். அதற்கு, நான் சட்டம் பேசவில்லை. சட்டம் சட்டத்தின் வழியில் செல்லட்டும், நான் எனது வழியில் போகிறேன் எனக் கூறினேன். அதன்பிறகு அவர் சாலை வழியாகச் சென்றார். நீங்கள் வென்றுவிட்டீர்கள் என அங்கு நின்றவர்கள் கூறினார்கள். நாம் சாலை வழியாக நடந்து செல்ல முடியுமா? முடியாது என்பதால்தானே நடைபாதையை ஒதுக்கிக் கொடுத்துள்ளார்கள். நடைபாதையில் எதற்காக அவர்கள் பைக்கை ஓட்ட வேண்டும். அந்த வீடியோவில் பலரும் அவ்வை சண்முகி எனவும், சிங்கப்பெண் எனவும் கமெண்ட் போட்டுவருகின்றனர். வீடியோ வைரலாகும் என நான் நினைக்கவில்லை" என்றார்.





















