Seva Teerth: 'குடிமக்கள் இறைவனுக்கு சமம்' - புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்...
மைலாஞ்சி விமர்சனம்: வழக்கமான முக்கோண காதல் கதைதான்; `மிஸ்டர் நேர்மை' நாயகன் ஜெயித்தாரா?
ஊட்டியில் வசித்து வரும் சாரு (கிருஷா குரூப்) பெற்றோர் அரவணைப்பின்றி சித்தியால் வளர்க்கப்படுகிறார். சித்தி ஏற்பாடு செய்யும் திருமணத்தில் துளியும் விருப்பமில்லாத சாரு, அங்கிருந்து எவரையாவது காதலித்து வெளியூருக்குத் தப்பி விட வேண்டும் எனத் திட்டமிடுகிறார். அப்படி தனது வீட்டின் அருகிலிருக்கும் ஒருவரைக் காதலிக்கத் தொடங்குகிறார் சாரு. ஆனால், தனது காதலைத் தெரியப்படுத்துவதற்கு முன்பே அவர் வீட்டைக் காலி செய்துவிட்டு சென்னைக்குப் புறப்பட்டுவிடுகிறார்.

அந்தச் சமயம், காட்டுயிர் புகைப்படக்காரராக இருக்கும் சூர்யா (ஸ்ரீராம் கார்த்திக்), ஓர் அரிய வகை பறவையைப் புகைப்படம் எடுப்பதற்கு ஊட்டிக்கு வருகிறார். அங்குச் சாருவுடன் சூர்யாவுக்கு நட்பு மலர்கிறது. நாளடைவில் அது காதலாகவும் வளர்கிறது. காதலைச் சொல்லிவிடலாம் எனச் சூர்யா நினைக்கையில், சென்னையில் இருக்கும் தன்னுடைய காதலுடன் சேர்த்து வைக்க அவரிடமே உதவி கேட்கிறார் சாரு. இறுதியில், சாருவின் காதல் என்ன ஆனது என்பதுதான் இந்த 'மைலாஞ்சி'யின் கதை.
ஒருதலைக் காதலில் குமைவது, ஒரு கட்டத்திற்கு மேல் அக்காதலிலிருந்து விலகிச் செல்வது எனக் காதலோடு போராடும் கதாபாத்திரத்தில் வரும் கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் செயற்கைத்தனமே ஆதிக்கம் செலுத்துகிறது. ஓரிரு இடங்களில் மட்டுமே கவனம் பெறும் நாயகி கிருஷா குரூப், தட்டுத் தடுமாறி ஜஸ்ட் பாஸ் வாங்குகிறார். ஆங்காங்கே காமெடி டிராக்கிற்காக வரும் சிங்கம் புலி, முனிஸ்காந்த் ஆகியோரும் வழக்கமான நடிப்பைத் தந்து நினைவில் தங்காமல் போகிறார்கள்.

ஊட்டியின் பனி பெய்யும் நிலத்தையும், அதன் பச்சை நிறங்களையும் தன்மை மாறாமல் படம்பிடித்து காதலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியூட்டுகிறார் ஒளிப்பதிவாளர் செழியன். திரை நேரம் சிறிதாக இருந்தாலும், நீண்ட நேரம் படம் பார்த்த உணர்வைத் தரும் வகையிலேயே படத்தைக் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத். ஆங்காங்கே, தாவி ஓடும் ஜம்ப் எடிட்களையும் கண்டும் காணாமல் போயிருக்கின்றன இவரின் கத்திரிகள். ஒலிக்கலவையிலும் சொதப்பல்கள் மட்டுமே மிஞ்சுகின்றன. பாடல்களில் இளையராஜா குரலில் வரும் 'உன்னை நான் விரும்பினேன்' பாடல் தென்றல் காற்றாய் வீசுகிறது. பின்னணி இசையில் இந்தக் காதல் கதையை மென்மையாகக் கரை சேர்க்கும் டச் இல்லாததும் ஏமாற்றமே!
உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாயகன், காதலனுக்காகக் காத்திருக்கும் நாயகி, இவர்கள் இருவருக்குள் நிகழும் காதல் என்பதாகத் திரைக்கதையை விரித்திருக்கிறார் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் அஜயன் பாலா. காதலைப் பற்றிய புரிதல் இல்லாமல் காதலில் விழும் நாயகி, காதலித்த பெண்ணை அவளுக்குப் பிடித்தவருடன் சேர்த்து வைக்கத் துடிக்கும் 'மிஸ்டர் நேர்மை' நாயகன் என வழக்கொழிந்த காதல் ஃபார்முலாக்கள் கொண்டே முதல் பாதி திரைக்கதை எழுப்பப்பட்டிருக்கிறது.

இதில், ஆங்காங்கே காமெடிகளையும் வம்படியாகத் திணித்து முதல் அரை மணி நேரத்திற்குள்ளாகவே டீ கேட்க வைக்கும் அளவிற்கு நம்மைச் சோர்வாக்குகிறது திரைக்கதை. காதல் கரைசேரும் பயணத்திலும் பழைய காதலன் மீண்டும் வருவது, நாயகனுக்கு ஏற்படும் விபத்து என்பது போன்ற 80ஸ் காதல் காவியங்களின் வாசமே ஹெவியாக அடிக்கிறது!
அத்தனை கண்டிப்பாக இருக்கும் சித்தி திடீரென அடுத்தடுத்த விஷயங்களுக்கு மனமாறும் கதை, நாயகி, நாயகன் மீது காதல் வசப்படும் கதை என எதிலும் நம்பகத்தன்மையும், அழுத்தமான பின்கதையும் இல்லாமல் சரிவான மலைப்பாதையை நோக்கியே திரைக்கதையை நகர்த்தி நம்மைக் கண்ணயரவும் வைக்கிறது படக்குழு. டச் மொபைல், உயர்தர கேமராக்கள் வைத்திருக்கும் நாயகன் எனக் காட்டப்படும் கதையில், ஊட்டியில் வசிக்கும் பெண்ணுக்கு மெயில் பற்றிக்கூட அறியாத விஷயமெல்லாம் லாஜிக் மீறல்!

திரையாக்கம், திரைக்கதை என எதிலும் கச்சிதமும் புதுமையும் காட்டாத இந்த `மைலாஞ்சி' அயர்ச்சியில் பார்வையாளர்களின் கண்களை மட்டுமே சிவக்க வைக்கிறது.





















