விஜய்: `மீட்பர்; ஒரு அரசன் வருவான்!' - ஸ்கோர் செய்த திமுக; சுதாரித்த தவெக - கிறி...
நாட்டாகுடி - இனி, `ஒரேயொரு'வர் வசிக்கும் கிராமமல்ல; துளிரும் நம்பிக்கை... ஊர் திரும்பும் மக்கள்!
ஒரே நபர் சிவகங்கை மாவட்டம், மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம், நாட்டாகுடி. சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் இந்த கிராமத்தில் வசித்துவந்த நிலையில், காலப்போக்கில் வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் என எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத காரணத்தால்... மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த கிராமத்திலிருந்து வெளியேறத் தொடங்கினர்.
பீதியடைந்த மக்கள்!
இத்தகைய சூழலில், இங்கு 5 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கொலைச் சம்பவம், மக்களை இன்னும் பீதியில் ஆழ்த்தியது. ``அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம் உள்ளிட்டவைக் கிடைக்காமல் இருந்த போதுகூட சொந்த ஊரை விட்டு வெளியேற மனமில்லாமல் பொறுத்துக் கொண்டோம். ஆனால் தற்போது உயிருக்கும் உத்தரவாதம் இல்லை" என்று ஆதங்கப்பட்டு, உடனடியாக அருகே இருக்கும் ஊர்களுக்கும், சிவகங்கைக்கும் குடிபெயர்ந்தனர். அதையடுத்து நாட்டாகுடியில் ஒருவர் மட்டும் வாழ்ந்து வருவதாகத் தகவல் பரவியது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, நாட்டாகுடியில் மக்களை மீண்டும் குடியமர்த்த முன்வந்தது.
தன்னார்வலரின் தன்னம்பிக்கை :
இதன் ஒரு பகுதியாக திருச்செல்வம் என்கிற தன்னார்வலருடன், மாவட்ட நிர்வாகம் இணைந்து ஊரை விட்டு வெளியேறிய கிராம மக்களிடம் பேசி, பல தன்னார்வலர்களின் உதவியுடன் ரூ.6.5 லட்சம் நிதி திரட்டி, கிராமத்தை விவசாயம் மற்றும் அடிப்படை தேவைகளுடன் மீட்டுருவக்கி வருகிறது. இது குறித்து திருச்செல்வம் கூறுகையில்,``ஒரு கிராமத்தில் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்றால், அங்கு விவசாயம் நல்ல முறையில் நடைபெறவேண்டும். அப்போதுதான் அங்கு ஒரு பணப்புழக்கம் வந்து, அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். மேலும், விவசாயத்தை நவீன முறைப்படுத்தி அதிக விளைச்சல் கொண்டுவந்து, மகசூல் அதிகப்படுத்த முடியும். இதற்காக தற்போது மாவட்ட ஆட்சியர் உதவியுடன் அடிப்படைத் தேவைகளான குடிநீர் மற்றும் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகைச் செய்துள்ளோம். மேலும் மக்களின் அச்சத்தைப் போக்க ஊர்முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
சுற்றிலும் வேலி அமைத்தனர்
ஆடு, மாடு, பன்றிகள் விளைநிலங்களுக்குள் வராமல் இருக்க, விளைநிலங்களைச் சுற்றி பெரிய வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விளைநிலங்களில் இருந்து கருவேல மரங்கள் அகற்றப்பட்டு... தற்போது வெண்பூசணி, தர்பூசணி, கத்தரி போன்ற செடிகள் வைக்கப்பட்டுள்ளன. இது பின்னாளில் அதிகப்படுத்தப்பட்டு விவசாயத்தில் சிறந்த கிராமமாக, நாட்டாகுடி விளங்கும்" என்றார் நம்பிக்கையுடன்!
தைரியமாக இருக்கிறோம்;
இந்த மாற்றம் குறித்து ஊரில் மீண்டும் குடியேறியுள்ள மக்கள் நம்மிடம் பேசுகையில்,நாட்டாகுடி அதனால்தான் தைரியமாக மீண்டும் குடியேறியுள்ளோம். இன்னும் பலரும் வர விருப்பம் தெரிவித்துள்ளனர். பேருந்து வசதி, கண்மாய் படித்துறை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரசு அவற்றைச் செய்து கொடுக்கும் என்று நம்புகிறோம்" என்றனர்.

எட்டு ஆண்டுகள் கழித்து வரும் வசந்தம்!
முறையான நீர் பாசனம் இல்லாமல் விவசாயம் பொய்த்த நிலத்தில்.... இன்று, எட்டு ஆண்டுகள் கழித்து மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் மடை திறக்கப்பட்டு, வரப்புகள் வழியாகப் பாயும் நீரை, ஊர்மக்கள் கூடி வரவேற்கும் காட்சி, தங்களை வசந்தம் நோக்கி அழைத்துச் செல்கிறது என்கின்றனர், மீண்டும் கிராமத்திற்கு வர ஆசைப்படும் மக்கள்.





புதிய நம்பிக்கை
ஆளே இல்லாமல் வெறிச்சோடிய நாட்டாகுடி, மீண்டும் திருவிழா கோலத்தில் மகிழ்ச்சியைக் கொண்டாட காத்திருக்கும் செய்தி, நலிவுற்ற விளிம்புநிலையில் உள்ள பல கிராமங்களுக்கு, புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.




























