`3,084 ஏக்கர் கோயில் நிலமா? பாஜக-வின் அப்பட்டமான பொய்; இதுதான் நடந்தது..!'- எம்....
’பாஜகவை எதிர்த்து எந்த கட்சியும் இப்போது பேசுவதில்லை’- மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
கோவை சவுரிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் கட்சிக்காரன் எந்த சம்பாத்தியமும் செய்ய தெரியாதவன். ஊரை அடித்து உலையில் போடத்தெரியாதவன். 55 ஆண்டுகளுக்கு பின்பு இப்போது 2 அமைச்சர்களை பார்த்து சந்தோஷப்பட்டு வருகிறோம். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருக்கின்றனர். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தமிழகத்திற்கு எதிரானது.
பா.ஜ.க-வில் அவரை நிறுத்தினால் ஜெயிக்கலாம், இவரை நிறுத்தினால் ஜெயிக்கலாம் என நிறுத்தி பார்த்தனர். ஆனால் ஜெயிக்க முடியவில்லை. இப்போது கொண்டையை மறைக்காமல் அமெரிக்காவில் இருந்து வேறு அமைப்பு பெயரில் ஒருத்தர் வர போகின்றார். தற்போது பா.ஜ.க-வை எதிர்த்து எந்த கட்சியும் பேசுவதில்லை. எல்லோரும் அமைதியாகிவிட்டனர். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை பார்த்து பழனிசாமிக்கும், மற்றவர்களுக்கும் பயம் என்பதால் பேசாமல் இருக்கின்றனர். நமக்கு மடியில் கணம் இல்லை. பா.ஜ.க குறித்து பேசினால் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை சோதனைகள் நடைபெறும் என்ற அச்சத்தில் பேசாமல் இருக்கின்றனர்.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மட்டும் நீட் வினாத்தாள் லீக் ஆகின்றது. பேப்பர் லீக் ஆவதால் தான் பா.ஜ.க தலைவர்களின் குழந்தைகளுக்கு சீட் கிடைக்கின்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து மேடையில் யாரும் அமராமல் உங்களுடன் அமர்ந்து இருக்கிறோம். பா.ஜ.க-வை சி.பிஎ.ம், காங்கிரஸ் மட்டும் எதிர்க்கின்றனர். இவ்வளவு நாளாக ஆட்சி செய்தவர்களுக்கும் இதில் ஏன் அக்கறை இல்லை? எந்த கட்சியும் மோடி, அமித்ஷாவை எதிர்த்து பேசுவதில்லை. விஜய் முதல்வராக வந்தவுடன் பணம் கொடுத்தால் வாக்கு கிடைக்கும் என்ற நிலை மாறிவிட்டது. இப்போது
நம்முடைய காலம் வந்திருக்கிறது, எல்லாருடைய நம்பிக்கையாலும் உழைப்பாலும் நாம் முன்னேறுவோம். உங்கள் முக்கியத்துவம் எப்போதும் இருக்கும். நாம் எல்லோரும் சேர்ந்து காங்கிரஸ் கட்சியை மாற்றுவோம். 5 தொகுதி ஜெயித்தாலும், நாம் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை வந்திருக்கிறது, பூட்டிற்கு நாம்தான் சாவி என்ற நிலையில் இருக்கின்றோம். நாம் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் நேரம் இது. யார் நல்லது செய்கின்றனரோ அவர்களுக்கான காலமாக மாறி விட்டது. காங்கிரஸ் கட்சி மட்டும்தான் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என இருக்கின்றோம், மற்ற கட்சிகளிடம் இருந்து ரவுடிதனம், கேடித்தனம் போன்றவற்றை காங்கிரஸ் கட்சியினர் கற்றுக்கொள்ளக் கூடாது” என்றார்.











