'தனி விமானம், ரூ.15 கோடி' - பணத்திற்கு விலைபோகும் எம்.பி.க்கள்? பாதுகாக்க போராடு...
பாலிவுட் நடிகர் குடும்பத்திடம் ரூ.16 கோடி மோசடி; மும்பை மாநகராட்சி உதவி கமிஷனர் தலைமறைவு
மும்பை மாநகராட்சியில் உதவி கமிஷனராக இருந்தவர் மகேஷ் பாட்டீல். இவர் பாலிவுட் நடிகர் ஜாவேத் ஜாஃப்ரி குடும்பத்தினரிடம் ரியல் எஸ்டேட் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி பிரிட்டனைச் சேர்ந்த நிஷித் பட்டேல் என்பவருடன் சேர்ந்து ரூ.16.24 கோடியை மோசடி செய்துள்ளார்.
நடிகர் ஜாவேத் மனைவி ஹபிபா, 2024ம் ஆண்டு சொத்து வரி பிரச்னை தொடர்பாகச் சந்தேகம் கேட்க மாநகராட்சி உதவி கமிஷனர் மகேஷ் பாட்டீலை முதல் முறையாகச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது மும்பை பாந்த்ரா பகுதியில் இருக்கும் நியூ கமல்குஞ்ச் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாகக் கட்டும் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
அதோடு இத்திட்டத்தை நிறைவேற்றி வரும் பிரிட்டனைச் சேர்ந்த இந்தியர் நிஷித் பட்டேலை அறிமுகம் செய்து அவர் மூலம் முதலீடு செய்யும்படி கேட்டுக்கொண்டார். நிதிஷ் பட்டேல் அடிக்கடி ஜாவேத் வீட்டிற்குச் சென்று இத்திட்டம் குறித்த விபரங்களைத் தாக்கல் செய்தார்.

அதோடு இத்திட்டத்தில் ரூ. 30 கோடி முதலீடு செய்யும்படியும், அதற்கு பதில் கட்டப்படும் கட்டிடத்தில் கடைகள் ஒதுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதோடு அவரது கூட்டாளி ரூபேஷ் மோரேயும் ஜாவேத் வீட்டிற்குச் சென்று பத்திரப்பதிவு தொடர்பான பணிகளைத் தான் முடித்து கொடுப்பதாகத் தெரிவித்தார்.
ரூபேஷ் மோரே தன்னை பத்திரப்பதிவுத் துறை அதிகாரியாகக் காட்டிக்கொண்டார். அவர்களை நம்பி ஜாவேத் குடும்பத்தினர் ரூ.16.24 கோடியை இத்திட்டத்தில் முதலீடு செய்தனர். இதற்கான பத்திரப் பதிவை ஜாவேத் வீட்டிற்கே சென்று முடித்தனர்.
ரூபேஷ் மோரே நடிகர் ஜாவேத் ஜாஃப்ரியின் வீட்டிற்குச் சென்று டெவலப்பர் சார்பாக ஜாவேத் மற்றும் சாட்சிகளின் புகைப்படங்கள், கையொப்பங்கள் மற்றும் கட்டைவிரல் பதிவுகளைப் பெறுவதற்கு அரசாங்கப் பதிவு அலுவலகங்களில் இருப்பதைப் போன்ற சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பெற்றார்.

கடந்த ஆண்டு ஜாவேத் குடும்பத்தினர் பாந்த்ராவில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்திற்குச் சென்று தாங்கள் பதிவு செய்த பத்திரங்களைக் காட்டி விசாரித்தபோது, அது போன்ற எந்த ஒரு பத்திரமும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து தங்களது பணத்தைத் திரும்பக் கொடுக்கும்படி ஜாவேத் குடும்பத்தினர் கேட்டனர். நிஷித் பட்டேல் பணத்தைத் திரும்பக் கொடுப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை. இதையடுத்து அவர்கள் கடந்த மாதம் மும்பை கார்ரோடு போலீஸில் முறைப்படி புகார் செய்தனர். அதன் அடிப்படையில் நிஷித் படேல், மகேஷ் பாட்டீல், ரூபேஷ் மோர், சாகர் மேத்தா, தேவேந்திர பட்வால் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது. இதில் நிஷித் பட்டேல் மற்றும் மோரே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோரே, கிராபிக் டிசைனர் என்பதால் அவரைப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயாரித்ததாக நிஷித் பட்டேல் தெரிவித்துள்ளார். அவர்கள் பத்திரப் பதிவுக்குப் பயன்படுத்திய இயந்திரங்கள் மற்றும் போலி சீல்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த மோசடியில் முக்கியக் கூட்டாளியாகக் கருதப்படும் மகேஷ் பாட்டீல் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். அவர் பணிக்கும் வரவில்லை. அவரது வீட்டிலும் இல்லை. இதையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க குற்றப்பிரிவு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

















