திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி...
புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின்பேரில், அறந்தாங்கி காவல் நிலைய ஆய்வாளர் செந்தூர்பாண்டியின் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அறந்தாங்கி அங்காளம்மன் கோவில் பகுதியில் போதை மாத்திரை சிரஞ்ச் வைத்திருந்த ராஜ்மோகன், சீனிவாசன், ராஜேஸ்வரன் ஆகிய மூன்று இளைஞர்களைக் கைதுசெய்தனர்.

அதோடு, அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ரொக்கப் பணம் 11,630 ரூபாய் மற்றும் அவர்கள் பயன்படுத்திய மாத்திரை, ஊசி போன்றவற்றை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து, அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இவர்களுக்கு போதை மாத்திரைகள் வழங்கியவர்கள் குறித்தும் விசாரணையை போலீஸார் தீவிரபடுத்தியுள்ளனர். இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகளை விற்பனை செய்து வந்த மூன்று பேரை போலீஸார் கைதுசெய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



















