நீ கவிதைகளா: `இந்த ஒரு வரிக்கு 3 நாட்கள் எடுத்துக்கொண்டோம்' - பாடலாசிரியர் ஜிகேப...
`விஷத்தின் சுவை என்ன?' - சிறுமிகளின் விபரீத எண்ணத்தில் பறிபோன 4 உயிர்; நடந்தது என்ன?
பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்பட்டவர்கள் ஆவர்.
5 மைனர் பெண்களின் விபரீத ஆசையால் அவர்களில் 4 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். அப்பெண்கள் பறவைகளை கொல்ல பயன்படும் விஷத்தை எடுத்துக்கொண்டு யாரும் இல்லாத காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் இந்த விஷத்தை, `குடித்து பார்த்து சாவுகிறோமா அல்லது உயிரோடு இருக்கிறோமா?' என்று சோதித்து பார்ப்போமா என்று பேசிக்கொண்டனர்.
விஷத்தை குடித்து சுவை பார்த்த தோழிகள்
அதோடு அவர்கள் அதனை தண்ணீரில் கலந்து குடித்து என்ன சுவையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிவு செய்தனர். அவர்கள் ஐந்து பேரும் விஷத்தை தண்ணீரில் கலந்து குடித்தனர்.

இதில் சிறிது நேரத்தில் 4 பெண்கள் அப்படியே மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த 5வது பெண் உடனே கிராமத்திற்கு ஓடி வந்து நடந்த சம்பவத்தை தெரிவித்தார். ஐந்தாவது மைனர் பெண்ணும் விஷம் குடித்து இருந்ததால் அவரை காப்பாற்ற அவருக்கு வேப்ப எண்ணெய் கொடுத்து குடிக்க வைத்து வாந்தி எடுக்க வைத்தனர்.
இதனால் அப்பெண் உயிர் பிழைத்துக்கொண்டார். அப்பெண்ணிடம் விசாரித்தபோது, ''4 பேரும் எனது கண்முன்பாக கீழே விழுந்து இறந்தனர். நான் சிறிதுதான் குடித்தேன். அதையும் துப்பிவிட்டேன். அதனால் பிழைத்துக்கொண்டேன்''என்று தெரிவித்தார். கிராமத்தினர் வெளியில் தெரியக்கூடாது என்று கருதி உடனே 4 பெண்களின் உடல்களையும் எடுத்து வந்து ஒரே சிதையில் வைத்து தகனம் செய்தனர்.
காதல் பிரச்னையில் தற்கொலை?
ஆனால் 4 பேரும் காதல் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரி அசோக்குமார் கூறுகையில், ''நாங்கள் நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட பெண்கள் சரஸ்வதி பூஜை நேரத்தில் சில வாலிபர்களுடன் சுற்றி இருக்கின்றனர். இதனால் அவர்களுடன் பெற்றோர் சண்டையிட்டுள்ளனர். எனவேதான் 5 பேரும் ஒன்றாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்''என்றார்.
ஆனால் போலீஸாரின் இக்கருத்தை இறந்து போனவர்களின் உறவினர்கள் மறுத்துள்ளனர். இது குறித்து இறந்து போன சிறுமி ஒருவரின் தந்தை கூறுகையில், ''எனது மகள் இறந்ததால் மகாராஷ்டிராவில் இருந்து வந்துள்ளேன். இறந்து போன அனைவருக்கும் 12 முதல் 15 வயது இருக்கும். அவர்கள் எப்படி இந்த சின்ன வயதில் ஒருவரை காதலிக்க முடியும்?. எதற்காக அவர்கள் அங்கு சென்று விஷம் குடித்தார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை''என்று தெரிவித்தார்.

போலீஸார் இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் தப்பி பிழைத்த மைனர் பெண்ணிடம் போலீஸார் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். 5 பேரும் வீட்டில் விளையாட செல்வதாக சொல்லிவிட்டு சென்றதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் 4 மைனர் பெண்கள் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.




















