அகழாய்வு: வெள்ளலூரில் கிடைத்த 'தக்களி'..சங்ககால ஜவுளித் தொழிலின் புதிய தடயமா?
போலீஸாரை கொலை செய்துவிட்டு தலைமறைவு வாழ்க்கை; காட்டிக்கொடுத்த போன்கால்: 27 ஆண்டுகளுக்கு பின் கைது
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் 27 ஆண்டுகளுக்கு முன்பு வீடு ஒன்றில் நடந்த கொள்ளை முயற்சியில் இரண்டு போலீஸாரை கொள்ளையர்கள் கொலை செய்தனர். இக்கொள்ளை மற்றும் கொலையில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட புரா என்பவன் தொடர்ந்து தலைமறைவாக இருந்தான். அவனை போலீஸார் தேடி வந்தனர். ஆனால் அவன் கிடைக்கவில்லை. அவனை பற்றி தகவல் கொடுத்தால் 50 ஆயிரம் சன்மானம் கொடுக்கப்படும் என்று போலீஸார் அறிவித்தனர். புரா தனது குடும்பத்தினர் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. இதனால் அவன் இறந்துவிட்டதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் போலீஸார் தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புராவின் கூட்டாளி ஒருவன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டான். அவன் புராவின் மைத்துனரை சந்தித்து பேசி இருக்கிறான். அப்போது அவர்கள் மது அருந்தினர்.

மது அருந்தியபோது புராவுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் போனில் பேசியதாக சிறையில் இருந்து வெளியில் வந்த நபர் தெரிவித்தார். இந்த தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. உடனே போலீஸார் மீண்டும் தேடுதல் முயற்சியை தீவிரப்படுத்தினர். போலீஸ் உளவாளிகளும் இதில் பயன்படுத்தப்பட்டனர்.
இத்தேடுதலில் அவன் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருப்பது தெரிய வந்தது. உடனே அவனை போலீஸார் மத்திய பிரதேசம் சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனை கைது செய்தவுடன் தான் அவர்கள் தேடும் நபர் கிடையாது என்று தெரிவித்தான். ஆனால் அவனிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டான். அவனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவன் கடந்த 27 ஆண்டுகளாக எப்படி வாழ்ந்தான் என்ற விபரம் தெரிய வந்தது. அவன் போலீஸாரை கொலை செய்துவிட்டு மத்திய பிரதேசம் சென்று சில ஆண்டுகள் கட்டிட தொழிலாளியாக பணியாற்றிவிட்டு பின்னர் போபால் சென்று லாரி டிரைவராக பணியாற்றியுள்ளான்.
அங்கு தனது பெயரை ஜமீல் என்று மாற்றிக்கொண்டு அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தான். அங்கு அவனுக்கு குழந்தைகளும் இருக்கின்றன. 27 ஆண்டுகளுக்கு பிறகு இறந்ததாக அறிவிக்கப்பட்ட கொலைக்குற்றவாளி ஒரு போன் அழைப்பால் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டான்.













