மும்பை: கடற்கரை சாலை தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்த பி.எம்.டபிள்யூ க...
மும்பை: கடற்கரை சாலை தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்த பி.எம்.டபிள்யூ கார்: 3 மாணவர்கள் பலி
மும்பையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடற்கரையோரம் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த சாலை கடலுக்குள் கட்டப்பட்டுள்ளது. இந்த சாலையில் இன்று கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார் ஒன்று, மெரைன் டிரைவிலிருந்து ஹாஜி அலி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. அதிவேகமாகச் சென்ற அந்த வாகனம் மேம்பாலத்தில் சென்றபோது சுற்றுத்தடுப்பு சுவரில் மோதிய பின்னர், பாலத்திலிருந்து கீழே விழுந்து.
கார் நிறுத்தும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிக்குள் கார் விழுந்தது. உடனே காரில் இருந்த நான்கு பேரும் நாயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் மூவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

ஆதித்ய கல்பேஷ்வர்(23) என்ற வாலிபர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷனய் கஜ்ஜால்(21), தைரிய தர்ஷன் சேத்(17), ஆதித்யா ஜகஸ்னியா(19) என உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்து காரணமாக கார் பாலத்தில் இருந்த விளம்பர பலகையை கிழித்தெறிந்தது. காரின் கண்ணாடி நூற்றுக்கணக்கான துண்டுகளாக உடைந்தது. காரின் முன்பகுதி முற்றிலும் நசுக்கப்பட்டது. பம்பர் கிழிந்து உள் பாகங்கள் வெளிப்பட்டன. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் இருந்த நான்கு இளைஞர்களும் ஜூஹுவில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றனர். அவர்கள் 'பேயிங் கெஸ்ட்' (paying guest) ஒன்றில் தங்கி இருந்தனர். அகமதாபாத்தைச் சேர்ந்த அவர்கள் மரைன் டிரைவிற்குச் சென்றிருந்தனர். மெரைன் டிரைவ் சென்றுவிட்டு அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது.
சில வாரங்களுக்கு முன்பு கடற்கரைச் சாலை சுரங்கப்பாதையில் பந்தயத்தில் ஈடுபட்டதற்காக லம்போர்கினி, பிஎம்டபிள்யூ எம்2 மற்றும் பிஎம்டபிள்யூ இசட்4 உள்ளிட்ட ஆறு முதல் ஏழு சூப்பர் கார்கள் மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.















