சென்னை: புதிதாக கட்டப்பட்டுள்ள விடற்றோருக்கான இரவு நேர காப்பகம் – திறந்து வைத்த ...
முல்லை பெரியாறு அணை: 14 ஆண்டுகளுக்குப்பின் நீர்மூழ்கி கருவி மூலம் ஆய்வு! எப்படி நடக்கும் தெரியுமா?
முல்லை பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள மக்களின் முக்கிய குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் ஆதரமாக உள்ளது.
கேரளாவில் அணை அமைந்திருப்பதால், அதன் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக இரு மாநிலங்களிடையே பிரச்சனை இருந்து வருகிறது.
இதையடுத்து இரு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது அணையின் உறுதி தன்மை குறித்து தெரிந்து கொள்வதற்காக 2011 ஆம் ஆண்டு ஆர்.ஒ.வி. மூலம் முல்லை பெரியாறு அணையில் மூழ்கி இருக்கும் பகுதிகளில் ஆய்வு நடந்தது.
இந்த ஆய்வில் அணையின் அடிப்பாகம் உறுதியாக இருப்பது தெரிய வந்ததது. இதையடுத்து 2014 ஆம் ஆண்டு அணையின் நீர்மட்டம் 142 அடி வரை உயர்த்தி கொள்ளலாம் என்றும், மேலும் பேபி அணையை பலப்படுத்திய பின் அணையின் முழு கொள்ளளவான 152 அடி வரை நீரை தேக்கி கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அணில் ஜெயின் தலைமையில் ‘மத்திய கண்காணிப்பு குழு’ ஒன்றையும் அமைத்ததோடு, வருடந்தோறும் அணையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அக்குழுவிற்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் நவம்பர் 10 ஆம் தேதி ஆய்வு செய்ததோடு, மதுரையில் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தினர். அப்போது கேரள அரசு, `அணையில் நீரில் மூழ்கி இருக்கும் பகுதிகளை ஆய்வு செய்யுமாறு’ கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில் 14 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கி படமெடுக்கும் கருவியான ஆர்.ஓ.வி. (Remotely operated vehicle) கொண்டு ஆய்வு மேற்கொள்ளும் பணி இன்று தொடங்கி 12 நாட்கள் நடக்க இருக்கிறது.

ஆர்ஒவி கருவி எப்படி வேலை செய்யும்?
நீரில் மூழ்கி ஆய்வு செய்யும் ஆர்ஒவி கருவியானது தரையிலிருந்து கேபிள் மூலமாக இயங்கும். கேபிள் மூலமாக மின்சாரம் கொடுக்கபடுவதால் 2 மணி முதல் 6 மணி நேரம் வரை தொடர்ந்து நீருக்குள் இயங்க முடியும்.
பேட்டரி சார்ந்த சிறிய ஆர்ஓவி- க்கள் 45 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை மட்டுமே செயல்படும் நிலையில், பெரிய அணை ஆய்வுகளுக்கு கேபிள் ஆர்விக்களே பயன்படுத்தப்படுகின்றன.
இந்த கருவியில் ஒன்றிலிருந்து மூன்று கேமிராக்களும், உயர் சக்தி எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதால், ஆழமான இருண்ட நீரிலும் தெளிவான காட்சி கிடைக்கும்.

ஆழம் அதிகரிக்கும்போது நிறங்கள் மங்குவதைக் சரிசெய்யும் தொழில்நுட்பம், நீர் மிகவும் மாசாக இருந்தால் கேமராவுடன் சேர்த்து சோனார் (imaging sonar) பயன்படுத்தி சுவர் வடிவம், விரிசல் போன்றவற்றை கண்டறியும் தொழில் நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அணை ஆய்வில் பயன்படுத்தப்படும் ஆர்ஓவி-கள் பொதுவாக 100 முதல் 500 மீட்டர் ஆழம் வரை செல்லக்கூடியவை. நீருக்குள் அனுப்பட்டவுடன் அணையின் அடி ஆழம் வரை சென்று அடித்தளப் பகுதிகளை சுற்றி வந்து, கான்கிரீட் விரிசல்கள், தடுப்புகளில் கழிவு நீர் வெளியேற்றம் போன்றவற்றை படம் பிடிப்பதோடு வீடியோவாகவும் பதிவு செய்யும்.

தற்போது முல்லை பெரியாறு அணையின் உட்புறம், முன்புறம் என மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள ஆய்விற்காக டெல்லியில் இருந்து ஆர்ஓவி நீர்மூழ்கி கருவி கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



















