UPSC / TNPSC: சென்னையில் இலவசப் பயிற்சி முகாம் - அனுமதி இலவசம்!
`மொழிபெயர்ப்பின் நிறம் ஆர்.சிவக்குமார்' - ஆகுதி பதிப்பகத்தின் ஒரு நாள் கருத்தரங்கு
எழுத்தாளர் அகரமுதல்வனின் ஆகுதி பதிப்பகம் வருடந்தோறும் படைப்பாளர்களையும், அவர்களுடைய படைப்புகளையும் கொண்டாடுவதற்கான நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும்.
அப்படி இந்தாண்டிற்கான ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்வில் மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவக்குமாரை கொண்டாடுவதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஆர்.சிவக்குமாரின் இலக்கிய பங்களிப்பை போற்றும் வகையில் இந்த நிகழ்வை வருகிற பிப்ரவரி 22-ம் தேதி சென்னை மயிலாப்பூரிலுள்ள கவிக்கோ அரங்கத்தில் நடத்தவிருக்கிறார்கள்.
இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த பல்வேறு எழுத்தாளர்களும், மொழிபெயர்ப்பாளர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆர்.சிவக்குமாரின் மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்து உரையாற்ற இருக்கிறார்கள்.
‘இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும்’ நூல் குறித்து மொழிபெயர்ப்பாளர் நரேனும், எழுத்தாளர் செந்தில் ஜெகந்நாதனும் பேசவுள்ளனர். ‘உருமாற்றம்’ நூல் குறித்து கவிஞர் றாம் சந்தோஷ் வடார்க்காடு, மொழிபெயர்ப்பாளர் சிறில் அலெக்ஸ் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
இதுபோல, ‘அந்த நாளின் கசடுகள்’ நூல் குறித்து மொழிபெயர்ப்பாளர் அசதா, ‘வசைமண்’ நூல் குறித்து மொழிபெயர்ப்பாளர் இல.சுபத்ரா, ‘சோஃபியின் உலகம்’ நூல் குறித்து கவிஞர் சபரிநாதன், எழுத்தாளர் தூயன், ‘விஜய நகரம்’ நூல் குறித்து விமர்சகர் விக்னேஷ் ஹரிஹரன் ஆகியோர் பேசவிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வு குறித்தும், இன்றைய சூழலில் மொழிபெயர்ப்பாளர் ஆர். சிவக்குமாரை கொண்டாட வேண்டியது எத்தனை அவசியம் என்பது பற்றியும் நம்மிடையே பேசிய எழுத்தாளர் அகரமுதல்வன், “ஆகுதி அமைப்பின் மூலம் வருடந்தோறும் எழுத்துலகின் முன்னோடிகளைக் கொண்டாடி வருகிறேன். இதற்கு முன் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன், மொழிபெயர்ப்பாளர் நிர்மல்யா ஆகியோரைக் கொண்டாடுவதற்கான ஒரு நாள் கருத்தரங்கை நான் நடத்தியிருக்கிறேன்.

இந்தாண்டு மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவக்குமாரை கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறோம். மலையாளப் பண்பாட்டை தமிழுக்குக் கொண்டு வந்தவர் மொழிபெயர்ப்பாளர் நிர்மல்யா. அவருக்காக ஆகுதிதான் முதன்முதலில் ஒரு நிகழ்வை நடத்தியிருந்தது.
அதன் பிறகு தமிழக அரசின் விருதுகளும் அவருக்குக் கிடைத்தன. அவரைப் போல, பல்வேறு தத்துவார்த்த புத்தகங்களையும் தமிழில் மொழிபெயர்த்த ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவக்குமார்.
இன்றைய மொழிபெயர்ப்பாளர்கள் பலருக்கு இவர்தான் முன்னோடி. தமிழ் சூழலில் எப்போதுமே எழுத்தாளர்களை முன்னோடிகளாகக் கருதிக் கொண்டாடப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

அவர்களைக் கொண்டாடவும் முடியும் என்பதன் செயல்வடிவம்தான் இந்த நிகழ்வு!” என்றவர், “10 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் ராம்தான் எனக்கு ஆர்.சிவக்குமாரை அறிமுகப்படுத்தினார். ஆங்கிலத்தைவிடவும் சிறப்பாக ஆர். சிவக்குமார் மொழிபெயர்த்திருந்த ‘சோஃபியின் உலகம்’ புத்தகத்தின் முதல் பகுதியை எனக்கு இயக்குநர் ராம் வாசித்துக் காண்பித்தார்.

அதன் பிறகு, அவருடைய புத்தகங்களைத் தேடிப் பிடித்து வாசித்தேன். வருடந்தோறும் வெளிவரும் அவருடைய நூல்களையும் தவறாமல் படித்து வந்திருக்கிறேன். இன்றைய சூழலில், வேற்று மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டாலே அது சிறப்பான புத்தகம் எனக் கருதப்படுகிறது.
காஃப்காவின் ‘உருமாற்றம்’ என்ற நூலை ஆர்.சிவக்குமார் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நூலை பலரும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அதில், ஆர்.சிவக்குமாரின் மொழிபெயர்ப்பு தனித்துவமானது. இன்று மொழிபெயர்ப்பு என்பது சாட் ஜிபிடி வரைக்கும் வந்துவிட்டது.
இன்று எழுதுபவர்கள்கூட சாட் ஜிபிடியைப் பயன்படுத்தித்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் இன்று அனைத்து பதிப்பகங்களிலும் 100 மொழிபெயர்ப்பு புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால், மொழிபெயர்ப்பிற்கு சிறந்த மரபொன்று இருக்கிறது. தமிழில் மொழிபெயர்ப்பு என்பதும் மிகவும் அவசியமானது.” என்றார்.




















