Quote of the day: 'நம்பிக்கையே முதல் வெற்றி!' - அமெரிக்க முன்னாள் அதிபர் சொல்வதை...
'ராமர் கோயில், நீட் முறைகேடு, ஒரே நாடு ஒரே தேர்தல்' - மோடி உரையில் இல்லாதவை குறித்து காங். பட்டியல்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
அந்த உரையில் சில விஷயங்கள் விடுப்பட்டிருக்கின்றன என்று தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ்.
"பிரதமர் எப்போதுமே செய்வது போல, இந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரையும் தனது வழக்கமான மற்றும் அர்த்தமற்ற வெற்றுப் பேச்சுகளுடனேயே தொடங்கியுள்ளார்.
ஆனால், இந்த அவையில் எதிர்க்கட்சிகள் மிக வலுவாக எழுப்ப உறுதியுடன் இருக்கும் முக்கியப் பிரச்னைகள் எவற்றைப் பற்றியும் பிரதமர் தனது உரையில் குறிப்பிடவில்லை.

i. ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கூட்டணியைச் சேர்ந்த நபர்களால் அயோத்தி ராமர் கோயிலில் நடத்தப்பட்ட காணிக்கை திருட்டு மற்றும் நம்பிக்கை துரோகம் ஒட்டுமொத்த நாட்டின் மனச்சாட்சியையும் உலுக்கியுள்ளது.
ii. நீட்-யுஜி 2026 வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நடந்த முறைகேடுகள் ஆகியவை இளைஞர் சக்தியைக் கொந்தளிக்கச் செய்துள்ளன; ஆனால், பிரதமர் தனது உரையில் இதைப் பற்றி மிக மேலோட்டமாக மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
iii. எதிர்க்கட்சிகளை உடைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மிரட்டல் உத்திகள் மற்றும் பண பலம்.
iv. மோடி அரசாங்கத்தின் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், வேளாண்மைத் துறை இணை அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சகம், அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் மற்றும் மத்தியப் பிரதேச முதலமைச்சர் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் சுயநல ஆதாயங்கள் குறித்த நம்பகமான குற்றச்சாட்டுகள்.
v. முறைகேடான தொகுதி மறுவரையறை செயல்முறை, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற ஏமாற்று வித்தை மற்றும் வி.பி.எஸ்.ஏ (VBSA) மசோதா ஆகியவற்றின் மூலம் இந்திய ஜனநாயகத்தையும், அரசியலமைப்பின் கூட்டாட்சித் தத்துவத்தையும் சீர்குலைக்க மோடி அரசு எடுத்து வரும் தொடர் முயற்சிகள்"












