ஈரோடு: மேயர் அறையில் முதல்வர் விஜய் படம் வைக்க எதிர்ப்பு; மாநகராட்சியில் சலசலப்ப...
அடம் பிடித்து வெளியேறிய ஹீரோயின் முடிக்கப்பட்ட தொடர்; ஹிட் சீரியல் ஹீரோயின் கெஸ்ட் ரோலில்? Tv update
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'சக்திவேல்' சீரியல் சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது நினைவிருக்கலாம்.
2023ம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்த சீரியலின் முதல் சீசன் கடந்தாண்டு முடிவடைந்தது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்தே தொடரின் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது.
ஆனால் இரண்டாவது சீசன் தொடங்கிய சில மாதங்களுக்குள்ளேயே, தற்போது சீரியல் முடிவடைந்துள்ளது.
இது குறித்து சீரியல் தொடர்புடைய ஏரியாவில் சிலரிடம் விசாரித்தோம்.
''முதல் சீசன்ல இருந்தே அஞ்சலி பாஸ்கர் சீரியல்ல ஹீரோயினா நடிச்சுட்டு வர்றாங்க. அவங்க தமிழ் சீரியலுக்கு வந்த நேரமா தெரியலை, அவங்க சொந்த ஊரான மலையாளத்துல அவங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கு. அதனால முதல் சீசன் முடிஞ்சப்பவே அவங்களுக்கு அங்க கிடைச்ச வாய்ப்புகளைச் சொல்லி, அங்க கமிட் ஆகப் போறதா சொல்றாங்கன்னு பேச்சு அடிபட்டது.
ஆனா இடையில என்ன நடந்திச்சோ தெரியல. இரண்டாவது சீசன்ல ஹீரோ மாறினப்பக்கூட ஹீரோயினா இவங்களே தொடந்தாங்க.
தொடங்கி சில மாசங்களே ஆன நிலையில, திரும்பவும் தனக்கு மலையாளத்துல கிடைச்ச வாய்ப்புகளைச் சொல்லியே, இந்த சீரியல்ல இருந்து தன்னை விடுவிக்கக் கேட்டதா தெரியுது.
தயாரிப்பு தரப்புல இருந்து எவ்வளவோ பேசிப் பார்த்தும், அவங்க வெளியேறணுங்கிற முடிவுல உறுதியா இருந்ததா சொன்னாங்க.
ரெண்டாவது சீசன்ல ஹீரோவும் மாறியிருந்த சூழல்ல... ஹீரோயினாவது அதே ஆர்ட்டிஸ்ட் தொடர்ந்தா நல்லாருக்கும்னு நினைச்சது தயாரிப்பு தரப்பு. ஆனா இவங்க அடம் பிடிச்சு வெளியேறிட்டதால திரும்பவும் வேற ஹீரோயினை கமிட் செய்து சீரியலைத் தொடர வேண்டாங்கிற முடிவை எடுத்து தொடரை முடிச்சிட்டாங்க. இவங்க ஒரு ஆள் அடம் பிடிச்சு வெளியில போனதால் பல ஆர்ட்டிஸ்ட்களுக்கு வாய்ப்பு போயிடுச்சு'' என்கிறார்கள் அவர்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பான 'ரோஜா' சீரியலை நினைவிருக்கிறதா? சமீப காலங்களில் தமிழ் தொலைக்காட்சி ஏரியாவில் அதிக நாட்கள் அதாவது ஆண்டுக் கணக்கில் ஒளிபரப்பான தொடர் என்ற பெருமை இந்த சீரியலுக்கு உண்டு.
இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் பிரியங்கா நல்கரி. ஆந்திராவைச் சேர்ந்த இவருக்கு இந்த சீரியல் நல்ல வரவேற்பையும் பேரையும் தந்தது. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே போட்டி சேனல்களில் வாய்புகள் வர, தாறூமாறாக தனது சம்பளத்தை உயர்த்தியதாக இவர் குறித்துச் செய்திகள் வெளியாகின.
'ரோஜா' முடிவடைந்த சூட்டோடு இன்னொரு சேனலில் கமிட் ஆனார். அங்கு அவர் கேட்ட சம்பளம் கிடைத்தது. ஆனாலும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குத் தாமதமாக வருவது உள்ளிட்ட சில புகார்கள் இவர் மீது வந்தவண்ணம் இருந்தன.
ஒருகட்டத்தில் அந்த சீரியலில் இருந்தும் வெளியேறினார். அதற்குப் பின் வேறு சேனல்களில் இவரை கமிட் செய்ய யோசித்தனர். இந்த நிலையில் சமீபமாக தமிழில் வாய்ப்புகள் ஏதுமில்லாமல் சொந்த ஊரிலேயே இருந்தவர், இப்போது மீண்டும் கலைஞர் டிவி சீரியல் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். அதுவும் ஏற்கெனவே ஒளிபரப்பாகி வரும் தொடரில் புதிதாக ஒரு கேரக்டரில் கமிட் ஆகியிருக்கிறார். கிட்டத்தட்ட அது கெஸ்ட் ரோல் போல என்கிறார்கள் சீரியல் தொடர்புடையவர்கள்.
'தொடர்ந்து ஹிட் சீரியல் ஹீரோயினாகவே முன்னணி சேனல்கள்ல நடிச்சிட்டிருந்திருக்கலாம். அவங்களாகவேதான் அந்த வாய்ப்புகளைத் தவற விட்டுட்டாங்க' என உச் கொட்டுகின்றனர் உடன் நடித்த சக ஆர்ட்டிஸ்ட்கள்.



















