'இந்தியா ஒரு காலனி அல்ல'- அமெரிக்காவுடனான வரி ஒப்பந்தம் குறித்து ஜோதிமணி விமர்ச...
அண்ணாமலை: புறக்கணிக்கும் தமிழக பாஜக; கைவிட்ட டெல்லி? - தேர்தல் பொறுப்பிலிருந்து விலகியது ஏன்?
`தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்' என பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருப்பது தமிழக அரசியல் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. 'தந்தைக்கு உடல்நிலை சரியில்லை' என அவர் சொன்னாலும் இந்த அறிவிப்புக்கு பின்னே சில அரசியல் மூவ் இருப்பதாக சொல்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்!
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க, பா.ம.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியை கட்டியிருக்கிறது பா.ஜ.க. கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை வகித்தாலும், 234 தொகுதிகளுக்கும் 72 தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தார் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
அவர் வெளிட்ட பட்டியலில் அண்ணாமலைக்கு சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளை கண்காணிக்கும் பொறுப்பு ஒதுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அண்ணாமலை ஆதரவாளர்கள் சிலர், "தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் சில கண்டிஷன்களை விதித்திருக்கிறது டெல்லி. அதன்படி ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு தொகுதிகளுக்கு இருமுறை பயணித்து, இரு தினங்கள் தங்கி தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தொகுதியிலுள்ள செல்வாக்கான பிரமுகர்களையும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த வேண்டும். இப்பணிகளுக்கு எப்படியும் 15 முதல் 20 நாட்கள் அண்ணாமலை பயணப்பட வேண்டியிருக்கும். அவரது தந்தையின் உடல்நிலை சீராக இல்லாத சூழலில் 15 நாட்கள் பயணிப்பதற்கு அவர் தயாராக இல்லை. கல்லூரி காலத்தில் தொடங்கி ஐ.பி.எஸ் பணியில் இருந்தவரை அவரது குடும்பத்தினருடன் அதிக நாட்கள் செலவழித்ததில்லை. எனவே உடல்நிலை சீரடையும்வரை தந்தையுடன் இருக்க விரும்புகிறார்" என்றனர்.
"தந்தையின் உடல்நிலையை காரணியாக வைத்து தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை தட்டிக் கழிக்கிறார்கள் அண்ணாமலை" என்கிறார்கள் பா.ஜ.க சீனியர்கள் சிலர்.
நம்மிடம் பேசியவர்கள் " 'மொத்த தமிழ்நாட்டையுமே கண்காணிக்கும் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்த எனக்கு 6 தொகுதி பொறுப்பாளராக நியமிப்பதா?' என்ற அதிருப்தியில்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார். மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து தூக்கியபோது அவருக்கு தேசிய பொறுப்புகள் வழங்கப்படவுள்ளது என தகவல்கள் சிறகடித்தன. ஆனால் அப்படி எந்த நகர்வையும் டெல்லி மேற்கொள்ளவில்லை. அது அண்ணாமலைக்கு ஏமாற்றத்தை அளித்தது.
மேலும் அவருக்கு ஒத்துவராத அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தது மட்டுமில்லாமல், 30-க்கும் குறைவான எண்ணிக்கைகளில் பா.ஜ.க போட்டியிடப் போவதையும் அவர் விரும்பவில்லை. மேலும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் அவரை இடம்பெறச் செய்யவில்லை, மதுராந்தகத்தில் பிரதமரை வரவேற்கும் குழுவிலும் அவர் பெயரைச் சேர்க்கவில்லை.

இப்படி பல்வேறு சம்பவங்களால் அதிருப்தியடையந்த அவர், தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன் என அறிவித்திருக்கிறார்.
'எனக்கு பொறுப்பு இல்லை', 'எனக்கு கூட்டணி பிடிக்கவில்லை, அதனால் வேலை செய்ய மாட்டேன்' என பா.ஜ.க-வில் ஒருவர் செயல்படுவதும் டெல்லி அதனை வேடிக்கைப் பார்ப்பதும் வியப்பாகவே இருக்கிறது" என்றனர்.
அண்ணாமலையை சரிகட்டுவதும், ஓரம்கட்டுவதும் டெல்லி கைகளில்தான்!


















